அவுஸ்திரேலியாவின், பபுவா நியூகினியாவில் உள்ள மனூஸ் தீவில் உயிரிழந்த, இலங்கை அகதியை, தாய்நாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தமிழ் தெரிவித்தார்.
மனூஸ் தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 32 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை (02) உயிரிழந்தார்.
எனினும் அவரது சடலத்தினை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“கிளிநொச்சியில் உள்ள அவரது உறவினர்களுடன் நாம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளோம். உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு 7 ஆயிரத்து 500 அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு, உறவினர்களிடத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உயிரிழந்தவரின் சடலம் மனூஸ் தீவில், பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.