சராசரியாக இலங்கையில் வருடாந்தம் பத்தாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்ததாக பதிவாகின்றன. 2016ஆம் ஆண்டு புள்ளி விபரங்களுக்கு அமைய 347 சிறுமியருக்கு எதிரான வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கொட்டதெனியவில் பாலகி சேயாவின் பாலியல் ரீதியான படுகொலை என்பன நாட்டை உலுக்கிய சம்பவங்களாகும்.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது சகலரினதும் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்பார்க்கப்பட்டுவந்த தீர்ப்பு கடந்த 27ஆம் திகதி வழங்கப்பட்டது. பாடசாலைக்குச் செல்லும் பதினெட்டே வயது நிரம்பிய மாணவி வித்தியா கடத்திச் செல்லப்பட்டு, வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததுடன், சம்பந்தப்பட்டவர்களை உயிருடன் விடக்கூடாது என்ற வைராக்கியத்தை பலரிடம் ஏற்படுத்தி இருந்தது.
தீர்ப்பு நாள்…
செப்டெம்பர் 27ஆம் யாழ். மேல்நீதிமன்ற கட்டடத்தின் 3ஆவது மாடியில் ஒரே பரபரப்பு. நீதிமன்றுக்கு வெளியே பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் என்ற பாதுகாப்புக் கெடுபிடிகள் காணப்பட, மூன்றாம் மாடியில் அரங்கம் நிறைந்த சனக்கூட்டம்.
சட்டத்துறை மாணவர்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் என பலதரப்பட்டவர்கள் இருப்பதற்கு ஆசனங்கள் இன்றி தவித்ததால் நீதிமன்றில் சலசலப்பு.
நாம் எதிர்பார்த்த தண்டனையைதான் நீதிமன்றம் உறுதிசெய்யும் என்ற முற்கூட்டிய கணக்கொன்று அனைவர் மத்தியிலும் காணப்பட்டாலும், இனம்புரியாத எதிர்பார்ப்பொன்றை சகலரிடமும் காணமுடிந்தது.
இரண்டு வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு சுமார் மூன்று மணி நேர நீதிமன்ற அமர்வின் பின்னர் வழங்கப்பட்டது. வித்தியாவின் படுகொலைக்காக நீதி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நீதிமன்றம் வந்திருந்தவர்களின் மனங்களில் திருப்தியானதொரு நிலையை காணக்கூடியதாக இருந்த அதேவேளை குற்றவாளிகளின் குடும்ப உறவுகள் கண்ணீருடன் இருந்ததையும் காணமுடிந்தது.
கலை 8.35 மணிக்கு குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களும் கைவிலங்கு மாட்டப்பட்டு சிறைக் காவலர்களால் அழைத்துவரப்பட்டனர்.
காலை ஒன்பது மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என சகலரும் கூடியபோதும், பத்து மணிக்கே நீதிபதிகளின் வருகை அமைந்தது.
ட்ரயல் அற் பார் நீதிபதிகளான திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம் சங்கர், வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன், யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரின் அமர்வு ஆரம்பமானது. குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் கூட்டுக்குள் நிறுத்தப்பட தீர்ப்பை நீதிபதி வாசிக்கத் தொடங்கினார்.
வித்தியாவுக்கு என்ன நடந்தது?
1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி சிவலோகநாதன் வித்தியா மாங்குளம் அரசாங்க வைத்தியசாலையில் பிறந்தார். நாட்டில் அப்போது நிலவிய யுத்த சூழலால் அவருடைய குடும்பம் அங்கிருந்து இடம்பெயர்ந்து தமது சொந்த கிராமமான புங்குடுதீவில் வசிக்கத் தொடங்கியது. வித்தியாவுக்கு இந்த துரதிர்ஷ்டமான சம்பவம் இடம்பெறும்போது புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படித்துவந்தாள்.
2015 ஜுன் மாதம் 13ஆம் திகதி 7.30 மணிக்கு பாடசாலைக்குச் செல்லப் புறப்பட்ட வித்தியா, வீடு திரும்பவில்லை. பாடசாலைக்குச் சென்ற மகள் பிற்பகல் 3 மணியாகி யும் வீடு திரு ம்பாததால் தாயான சரஸ்வதி அவரைத் தேடத்தொடங்குகிறார்.
வித்தியாவின் சகோதரர் தனது தங்கை காணாமல் போனது குறித்து குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது அவர்கள் அதனை ஏற்க மறுக்கவே ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
தனது தங்கையைத் தேடும் முயற்சியை தொடர்ந்த நிஷாந்தன், மறுநாள் அதாவது 14ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தங்கையை சடலமாகக் காண்கின்றார்.
அலரிமரமொன்றில் நிர்வாணமாக, கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட நிலையில் அவருடைய சடலத்தைக் கண்ட அவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க சில மணி நேரங்கள் கழித்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
15ஆம் திகதி வித்தியாவின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதனைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும் இடம்பெற்றன.
17ஆம் திகதி ஐந்து சந்தேகநபர்கள் புங்குடுதீவில் கைது செய்யப்படுகின்றனர். 18ஆம் திகதி சுவிஸ் குமார் என்ற பிரதான நபர் கொழும்பில் கைது செய்யப்படுகிறார். இவர்கள் அனைவரும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றனர். விசாரணைகள் தொடர்ந்தன.
வழக்கை துரிதப்படுத்தி முடிப்பதற்காக கடந்த மே மாதம் 23ஆம் திகதி சட்டமா அதிபர் மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய ட்ரயல் அற்பாரை நியமித்தார்.
ஜுன் மாதம் 28ஆம் திகதி ட்ரயல் அற்பார் விசாரணைகள் ஆரம்பமாகி கடந்த 27ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 53 சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
சம்பவ தினத்தன்று பாடசாலைக்குச் சென்ற வித்யாவை குற்றவாளிகளான பூபாலசிங்கம் ஜெயகுமார் அல்லது ரவி, சிவதேவன் துஷாந்தன் அல்லது பெரியதம்பி ஆகியோர் இடைமறித்துள்ளனர்.
இதில் ரவி என்பவர் வித்தியாவை தான் காதலிப்பதாகக் கூற அவர் மறுத்துள்ளார். கன்னத்தில் அறைந்து வித்தியாவை இழுத்துச் சென்றுள்ளனர்.
இழுத்துச் சென்ற நால்வரும் ஆள்நடமாட்டம் அற்ற இடத்தில் அவரை நிர்வாணமாக்கி இருவர் கால்களையும் பிடித்திருக்க பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஒருவர் மாறி ஒருவராக நால்வரும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக அரசாங்க சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஷ்கரன் சாட்சியமளித்துள்ளார். இதன்போது அவர்கள் வீடியோ எடுத்ததையும் அவர் உறுதி செய்திருப்பதாக இறுதித் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கில் வித்தியாவின் கண்ணாடி முக்கியதொரு சாட்சிப் பொருளாகியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புபட்ட ரவி என்பவருடைய வீட்டில் கண்ணாடி மீட்கப்பட்டிருந்ததுடன், அது வித்தியாவின் கண்ணாடி என்பதை அவருடைய தாயார் உறுதிப்படுத்தியிருந்தார்.
அது மாத்திரமன்றி சம்பவம் இடம்பெற்றபோது குறித்த பகுதியில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரினதும் நடமாட்டம் இருந்தமையை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் (12) வித்தியா வேறொரு பாடசாலைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது வீதியில் வெள்ளை நிற வானொன்று நிற்பதையும், அதிலிருந்த சிலர் தன்னை நோட்டம் விட்டுக்கொண்டிருப்பதையும் கண்ணுற்றுள்ளார்.
அதனை தன்னுடைய தாயிடமும் அவர் கூறியுள்ளார். அன்றையதினம் குறித்த வானில் சுவிஸ்குமார் உள்ளிட்ட குற்றவாளிகள் பலர் நின்றிருந்ததை அருகிலிருந்த கடைக்காரர் உள்ளிட்டவர்கள் கண்டிருந்ததுடன் அதனை நீதிமன்றில் சாட்சியாகவும் கூறியிருந்தனர்.
ஆசிய பெண் ஒருவரை கடத்தி கற்பழித்து கொலைசெய்வது போன்ற வீடியோவென்றை சுவிஸில் உள்ள மாபியா கும்பலொன்றுக்கு அனுப்பும் ஒப்பந்தம் தனக்கு கிடைத்திருப்பதாக சுவிஸ் குமார் என அழைக்கப்படும். மகாலிங்கம் சசிகுமார், வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது சக கைதி ஒருவருக்குக் கூறியமை நீதிமன்றத்தில் சாட்சியாகப் பதிவாகியுள்ளது.
இதற்கான நபராக வித்தியாவை தெரிவுசெய்வதற்கே சுவிஸ்குமார் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல்நாள் புங்குடுதீவு சென்றிருப்பதாக நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
கடத்திச் செல்லப்பட்ட வித்தியா பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நால்வரினாலும் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் மயக்கமுற்ற நிலையில் இழுத்துவரப்பட்டு மரமொன்றில் கட்டப்பட்டுள்ளார்.
கால்கள் 180 பாகை விரித்துக் கட்டப்பட்டதுடன், கைகளும் தலைக்கு மேலே உயர்த்தி விரித்து மரத்துடன் கட்டப்பட்டுள்ளன. வாய்க்குள் உள்ளாடை திணிக்கப்பட்டு, மரக்குற்றியொன்றால் வாய்க்குள் குத்தப்பட்டு காயம் ஏற்பட்டமை சட்டமருத்துவ அதிகாரியின் சாட்சியத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட காயம், வாய்க்குள் குத்தப்பட்டமையால் ஏற்பட்ட காயம் மற்றும் உள்ளாடையை வாய்க்குள் திணிக்கப்பட்டமை, கழுத்துப் பட்டியால் கழுத்து நெரிக்கப்பட்டமை போன்றவற்றினால் உடலில் காயங்கள் காணப்பட்டமையை வைத்தியர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாக நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்தனர்.
நீதிபதிகளின் தீர்ப்பு
ட்ரயல் அற் பாரில் அங்கம் வகித்த வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் 375 பக்கங்களைக்கொண்ட தீர்ப்பினை வாசித்தபோது இந்த விடயங்களைக் கூறியிருந்தார். சாட்சிகள் குறுக்கு விசாரணைகளில் கூறிய விடயங்களில் முக்கியமானவற்றை சுட்டிக்காட்டியிருந்தார்.
சுவிஸ்குமார் வவுனியா சிறைச்சாலையிலிருந்தபோது சக சிறைக்கைதியான முஸ்லிம் இளைஞருடன் அவர் நடத்தி கலந்துரையாடல் முக்கிய சாட்சியாக அமைந்ததாக நீதிபதி குறிப்பிட்டார்.
தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவான வீடியோ ஒன்று அழிந்துள்ளது. அதனை மீளப்பெற முடியுமா என்பதே அவர்களுக்கிடையிலான ஆரம்ப சம்பாஷணையாக அமைந்துள்ளது.
சுவிஸிலிருந்து மாபியா கும்பலொன்று ஆசிய பெண்ணை கடத்தி கற்பழித்து கொலைசெய்யும் வீடியோ காட்சியை கோரியிருந்தது. அதனை எடுத்து நான் அனுப்பியுள்ளேன். கையடக்கத் தொலைபேசியிலிருந்து அதனை அழித்துவிட்டேன்.
இதனை மீளப்பெற முடியுமா என சுவிஸ்குமார் தன்னைக் கேட்டதாக அந்த சாட்சி கூறியிருந்தார். அத்துடன், தன்னையும் தன்னுடைய சகோதரனையும் அரசாங்க தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கு 2 கோடி ரூபாய்களை வழங்குவதாகவும் அதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் சுவிஸ்குமார் அந்த முஸ்லிம் இளைஞரிடம் கேட்டதாக சாட்சியத்தில் பதிவாகியுள்ளது.
எனினும், குறித்த முஸ்லிம் இளைஞர் தன்னிடம் பணம் கோரியதாக சுவிஸ்குமார் நீதிமன்ற குறுக்கு விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
காலை 7.30 மணிக்கு கடத்தப்பட்ட வித்தியாவின் உயிர் 9 மணிக்குள் பிரிந்துள்ளது. அதற்குள் சகல சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டு முடிந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பின்னர் பல மணி நேரம் வித்தியாவின் உடல் மழையில் நனைந்ததால் பல தடையங்கள் அழிந்து போயிருப்பதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் சாட்சியமளித்துள்ளனர்.
நேரடியான தடயங்கள் இல்லாவிட்டாலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்பதற்கு பல்வேறு சாட்சிகள் சான்றாக இருப்பதாகச் சுட்டிக் காட்டியிருந்த நீதிபதி, இதுபோன்று பல வழக்குகளில் உறுதியான சாட்சியங்களைக் கொண்டு குற்றவாளிகள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் கூட்டுவன்புணர்ச்சி, கொலை, கூட்டு சதி என்பவற்றில் ஈடுபட்டமை உறுதியாவதாக நீதிபதி சசி மகேந்திரன் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
அவருடைய தீர்ப்பை சக நீதிபதிகளான பிரேம்சங்கர் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தனிப்பட்ட தீர்பொன்றையும் வழங்கியிருந்தார்.
நீதிபதி இளஞ்செழியனின் தனிப்பட்ட தீர்ப்பு
நீதிபதி சசி மகேந்திரனின் தீர்ப்பு சுமார் 2 மணிநேரம் அறிவிக்கப்பட்ட பின்னர், இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை சுருக்கமாக அறிவித்தார்.
கிருசாந்தி கொலைவழக்கு, ரீட்டா ஜோன் வழக்கு, சரத் அம்பேப்பிட்டிய கொலைவழக்கு உள்ளிட்ட வழக்குகளில் நியமிக்கப்பட்ட ட்ரயல் அற் பார் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு தனது தீர்ப்பை முன்வைப்பதாக அறிவித்த அவர், சர்வதேச நீதிமன்றுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களையும் ஆராய்ந்திருப்பதாகக் கூறினார்.
‘வித்தியாவின் உடலிலிருந்து பெறப்பட்ட முடியொன்று டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த முடியானது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையது என கூறப்பட்டுள்ளது.
ஒன்று வித்தியாவினது அல்லது அவருடைய தாயுடையதாக இருக்க வேண்டும். அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்க வேண்டும். வித்தியாவின் தாயுடையதாக இருக்க நூறுவீத வாய்ப்பு இல்லையென்பதால் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாம் மூன்றாம் எதிரிகளுடையதாகவே இருக்க முடியும்’ என்றார்.
வித்தியா விவகாரத்துக்கு 2015 ஜுன் 12ஆம் திகதி ஆலடி சந்தியில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்போது சசி எனப்படும் சசீந்திரன், சந்திரா, கண்ணன் ஆகியோரும் சுவிஸ்குமாருடன் இருந்துள்ளனர்.
450 கிலோ மீற்றருக்கு அப்பால் அந்தக் கொடூரசம்பவம் இடம்பெறும்போது சுவிஸ்குமாரும் ஏனையவர்களும் தமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனக் காண்பிப்பதற்காக கொழும்பில் சி.சி.ரி.வி கெமராக்களில் தாம் பதிவாகும் வகையில் சில இடங்களில் நடமாடியுள்ளனர்.
வழக்கு விசாரணைகளில் who is vodya? எனக் கேட்டவர்கள், 15ஆம் திகதி நடைபெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்தனர். மரணச்சடங்கு முடிவடைந்ததும் 17ஆம் திகதி சசி, சந்திரா, பெரியதம்பி, கண்ணன், நிஷாந்தன் ஆகியோர் கைதுசெய்யப்படுகின்றனர். இவர்களை மக்கள் தாக்க முற்பட படகு மூலம் யாழ் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
‘இவர்கள் கைது செய்துவைக்கப்பட்டிருந்த சமயத்தில் வேலணையில் சுவிஸ்குமார் பொது மக்களில் சுற்றிவளைக்கப்பட்டு கட்டிவைக்கப்படுகிறார்.
அவரை மீட்பதற்காக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமார் கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றுள்ளார்.
சசியின் அண்ணாவா? எனக் கேட்டுக்கொண்டு சென்ற அவர் மக்களை அடிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் எனக் கூறுகிறார். இரவு 9 மணிக்குச் சென்ற அவர் 11 மணிவரை அங்கிருந்து சுவிஸ்குமாரை மக்களிடமிருந்து விடுவித்துச் சென்றுள்ளார்.
இதனை சுவிஸ்குமார் தனது சாட்சியத்திலும் கூறியுள்ளார். பொலிஸாரின் பிடியில் உள்ள சந்தேகநபர் ஒருவரின் பெயரைக் கூறிக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் எப்படி அங்கு சென்றார்?
மக்களால் கட்டிவைக்கப்பட்டிருந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காது அவரை விடுவித்துச் சென்றுள்ளார்’ என நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார்.
ஜுன் 18ஆம் திகதி சட்டத்துறை பீடாதிபதி தமிழ்மாறன் சுவிஸ்குமாரை ஸ்ரீகஜன் என்ற பொலிஸ் அதிகாரியிடம் கையளிக்கிறார். யாழ் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாது சுவிஸ்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு இல்லை என்பதால் அவரை அங்கு அழைத்துச் செல்ல தேவையில்லை என்பதால் சுவிஸ்குமார் விடுவிக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து கொழும்பு செல்கிறார்.
இதில் பொலிஸாரின் துர்நடத்தை, ஒழுங்கீனம் காரணமாக வழக்கின் முக்கிய சந்தேகநபர் விடுவிக்கப்படுவதுடன் வழக்கு விசாரணைகள் முறையாக நடைபெறவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
சுவிஸ்குமார் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ம் திகதி சுவிஸ் செல்லவிருந்தபோதும் சரியான நேரத்தில் விமானத்தைப் பிடிக்கத் தவறியமையால் போகமுடியாது போனதாக அவருடைய மனைவி சாட்சியமளித்துள்ளார்.
எனினும் அவர் கைது செய்யப்படும் 17ஆம் திகதிவரை சுவிஸ் செல்வதற்கான விமான டிக்கட்டை மீள் உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. எனவே ஜுன் 7ஆம் திகதி முதல் சதித் திட்டம் ஆரம்பமாகிறது.
பட்டப்பகலில் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் எதிரிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக 200 பக்க அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
சித்திரவதை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றாலும், வழக்கின் விடயத்தை திசை திருப்பும் வகையில் இவ்வாறான அறிக்கை அமைந்தது. அது மாத்திரமன்றி சித்திரவதை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரிகளின் அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.
சி.ஐ.டியினருக்கு பாராட்டு
வித்தியா கொலை வழக்கு விவகாரத்தில் ஊர்காவற்துறை பொலிஸார் அசமந்த நிலையில் காணப்பட்டபோது, சுமார் 10 மாதங்களின் பின்னர் சீ.ஐ.டியினர் குறித்த வழக்கை கையில் எடுத்து உயிர்கொடுத்தனர்.
குறிப்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசேரா மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா கடுமையாக பாடுபட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். அவருடைய சேவையை பாராட்டுவதாக இளஞ்செழியன் தீர்ப்பில் கூறினார்.
அத்துடன், வித்தியா படுகொலையுடன் இராணுவத்தினர் அல்லது கடற்படையினர்தான் தொடர்புபட்டுள்ளார்கள் என்பதைக் காண்பிப்பதற்காகவே சனநடமாட்டம் இடம்பெறக் கூடிய பகுதியிலிருந்து சுமார் 15 அடி தூரத்தில் வித்தியாவின் சடலம் கட்டப்பட்டிருந்தது.
பாதுகாப்புத் தரப்பினர் மீது குற்றத்தை சுமத்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் நடமாட்டத்துக்கான எந்தவித சாட்சியங்களும் இல்லை.
‘Cry for justice’ என்பதில் ஊடகங்கள் போராடியமையால் இன்று இந்தக் கட்டத்தை அடையமுடிந்துள்ளது. இதில் 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகள் மீது போதிய சாட்சியங்கள் இல்லை என்பதால் வழக்குத் தொடுநரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கவனமாக செயற்பட்டுள்ளார். அப்பாவிகள் தண்டனை பெற்றுவிடக்கூடாது என்ற அவருடைய நியாயமான நிலைப்பாடும் நீதிபதி இளஞ்செழியனால் பாராட்டப்பட்டது.
தண்டனை
இளஞ்செழியனின் தனிப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து 1ஆம் 7ஆம் எதிரிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டார்கள்.
கூட்டு பாலியல்வன்புணர்வு, கொலை, கொலைக்கு சதி செய்தமை, கூட்டு சதிசெய்தமை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. குற்றஞ்சுமத்தப்பட்ட பின்னர் உங்களுக்கு ஏன் மரணதண்டனை வழங்கப்படக் கூடாது என்ற காரணத்தை கூற குற்றவாளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
நாம் குற்றவாளிகள் இல்லை
‘நான் ஒன்டும் செய்யேல்ல. எனக்கு பிள்ளைகள் இருக்கினம். அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில் நான் எப்படி குற்றமிழைப்பேன்’ என கண்ணீருடன் கூறினார் ரவி மாமா என அழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார்.
‘நான் இதனுடன் சம்பந்தப்படவில்லை. ஏன் நான் இப்படிச் செய்ய வேண்டும்? சீ.ஐ.டியும், பொலிஸும் இணைந்து பொய் கேஸ் போட்டுள்ளார்கள்.
சீ.ஐ.டியினர் எம்மை கட்டி அடித்தனர். அவர்கள் சாட்சிகளை மிரட்டி பொய் சாட்சிசொல்ல வைத்துள்ளனர்’ என்றார் செந்தில் எனப்படும் பூபாலசிங்கம் தவக்குமார்.
‘நான் அன்றையதினம் கொழும்பில் நின்றேன். 12 மணிக்கு வெள்ளவத்தை சின்னல் லைற் சந்தியில் நின்றமைக்கான சீ.சி.ரி.வி கெமரா பதிவுகள் இருக்கின்றன.
ஆனால் பொலிஸார் அவற்றைப் பெறுகின்றனர் இல்லை. எனக்கு பிள்ளைகள், மனைவி இருக்கின்றனர். அன்று நான் ஹோட்டலில் நின்றேன். பொஸ்ஸை (உரிமையாளர்) சாட்சிசொல்ல வருமாறு கோரியபோதும் அவர் சாட்சிசொல்ல வரவில்லை. நான் பிள்ளைகளுடன் வாழவேண்டும்’ என மகாலிங்கம் சசீந்திரன் அல்லது சசி கூறினார்.
‘நான் பெண் சகோதரிகளுடன் பிறந்தவன். எனக்கு இப்படிச் செய்ய வேண்டிய தேவை கிடையாது. சீ.ஐ.டியினர் வேண்டுமென்று பொய் சாட்சிகளை சோடித்து வழக்கை முடித்துள்ளனர்.
அவர்களே எம்மை குற்றவாளிகளாக்கியுள்ளனர். குற்றவாளிகள் வெளியே இருக்கின்றனர். அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். மழையினால் தடயங்கள் கழுவப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். டீ.என்.ஏ சோதனையில் எமது தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
எமது தெய்வங்கள் மேல் உலகம் சென்றுவிட்டனர். அதனால் தான் எமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எமக்கு மட்டும் ஏற்பட்ட அவமானம் அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட அவமானம். கடந்த காலத்தில் இடம்பெற்ற பல நடவடிக்கைகள் விசாரிக்கப்படவில்லை. இதனாலேயே எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது’ என சந்திரா எனப்படும் சந்திரகாசன் தெரிவித்தார்.
‘சீ.ஐ.டியினர் சுரேஸ்கரனுக்கு பணத்தைக் கொடுத்து சாட்சிசொல்ல வைத்துள்ளனர். எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு ஐந்து பெண் சகோதரிகள் இருக்கின்றனர்’ என பெரியதம்பி என அழைக்கப்படும் துஷாந்தன் கூறினார்.
‘என்னுடன் இருக்கும் அனைவரும் கூறுவது உண்மை. சீ.ஐ.டி.யினர் உருவாக்கிய பொய் கேஸ் இது. முடிந்தால் சற்றல் லைட்டை பயன்படுத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி இன்னொரு தமிழருக்கு நிலைமை ஏற்படக்கூடாது’ என சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் தெரிவித்தார்.
இவர்கள் தமது கருத்துக்களைக் கூறும்போது சனக்கூட்டம் நிறைந்த அறையில் மொதுவான சிரிப்பொலியும் கேட்டது. இவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்ட பின்னர் நீதிபதிகள் தமது இறுதித் தீர்ப்பை அறிவித்தனர்.
கூட்டு வன்புணர்ச்சி, கொலை சதித்திட்டம், கொலை, கூட்டு சதி உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்களில் ஏழு பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 30 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், ஐவர் தலா 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துவதுடன், இருவர் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்றும் ஏழு பேரும் வித்தியாவின் குடும்பத்துக்கு தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்துவதுடன், தவறும் பட்சத்தில் 4 வருட சாதாரண சிறைத்தண்டனையும் வழங்கப்படும். தண்டப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் 4 மாதங்கள் மற்றும் 7 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் நீதிமன்ற மின் விளக்குகள், அணைக்கப்பட்டு 1.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுடன் நீதிமன்றம் கலைந்தது.
எந்தத் தாய்க்கும் இந்த நிலைமை வேண்டாம்
சுமார் இரண்டு வருடங்களாக நீதிக்காக ஏங்கிக்கிடந்த வித்தியாவின் தாய் சற்று திடமாக நீதிமன்றைவிட்டு வெளியே வந்தார். நீதிமன்றத்துக்கு வெளியே கூடிநின்ற ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டதும், அடக்கிவைத்திருந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது கதறினார். ‘மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக போராடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி’ என கண்ணீருடன் கைகூப்பிக் கூறினார்.
‘எந்தவொரு தாய்க்கும் இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது. தற்பொழுது நீதி கிடைத்துள்ளபோதும் இன்று எனது பிள்ளை உயிருடன் இல்லை’ என்றார்.
அவளுக்காக போராடியவர்கள், ஊடகங்கள் மற்றும் அடிவாங்கியவர்கள் என சகல தரப்பினருக்கும் நன்றி. சீ.ஐ.டியினராலேயே இந்த நியாயம் எமக்கு கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அதிகாரி மேலும் பல பதவி உயர்வுகளைப் பெறவேண்டும் என்றும் அவர் மனமார வாழ்த்திய அவரை பொலிஸ் அதிகாரிகளின் ஜீப்பில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
தம்முடன் படித்த சக நண்பியின் இழப்பிற்கு நீதிவேண்டி நீதிமன்றம் வந்திருந்த வித்தியாவின் நண்பிகளுக்கு சற்று நிம்மதி கிடைத்தது. ‘தண்டனை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
சாத்வீகமாக போராட்டங்களை முன்னெடுத்தோம். மாணவர்களாக எம்மால் தொடர்ந்து போராட முடியாது போனாலும், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது எமக்கு மகிழ்ச்சியான செய்தி. புங்குடுதீவு முழுவதும் இதனைக் கூறி மகிழ்ச்சியடைவோம்’ என்றார் வித்தியாவின் நண்பர் ராகுலன்.
‘இத்தீர்ப்பானது பெண்களுக்கு கிடைத்த விடுதலை. வேறு யாருக்கும் இப்படியான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது’ என்பது தவராசா ஹன்சிகாவின் எதிர்பார்ப்பு.
வரலாற்றில் பதிவான தீர்ப்பு
நீதியின் மீது நம்பிக்கைவைத்து இதுபோன்ற ஹன்சிக்காக்கள் பலர் நாளாந்த வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இலங்கையை பொறுத்த வரையில் நாளொன்றுக்கு நாடு முழுவதிலும் 13ற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறான சம்பவங்களில் ஒரிருவர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. குறிப்பாக பெண்கள் அல்லது சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி என்பது சாதாரணதொரு குற்றம் போன்றதாக பார்க்கப்படுவதுடன்இ இதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாமை இவை தொடர்வதற்கான முக்கிய காரணமாகும்.
வித்தியா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் செயற்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதாவது ஆண்கள் மது, மாது என்பவற்றில் நாட்டம் கொண்டிருப்பது சாதாரண விடயமாக பார்க்கப்படுகின்றமையாலா குற்றவாளிகளை தப்பவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற சந்தேகம் வலுக்கிறது.
அது மாத்திரமன்றி பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரத்துக்கான அமைச்சுப் பொறுப்பொன்றை வகிக்கும் நபர் ஒருவர் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியொருவரை முன்னர் தப்பிக்கவைக்க முயற்சித்தமை நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றுள்ளது. அது மாத்திரமன்றி பொலிஸாரின் விசாரணைகளில் காணப்படும் அசமந்தப் போக்கு போன்றனவும் வித்தியா வழக்கில் வெளிச்சமாகியுள்ளன.
வித்தியா வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப் போவதாக குற்றவாளிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன கூறியுள்ளபோதும் அப்பாவியாக கொல்லப்படும் வித்தியாக்களை பாதுகாக்க இத்தீர்ப்பு முன்னுதராணமாக அமைய வேண்டும்.