கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதெனக் கருதப்படும் கவர்ஸ் கோப்ரேஷன் சேர்விசர்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரான இரேசா சில்வா கைதுசெய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்த முடியாத வழிகளில் சம்பாதித்ததாக கூறப்படும் 30 மில்லியன் ரூபாவை வரையறுக்கப்பட்ட கவர்ஸ் கோப்ரேஷன் சேர்விசர்ஸ் தனியார் நிறுவனம் ஊடாக கறுப்புப் பண சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள.
குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கருதப்படும் பட்டபொல ஆரச்சிகே ஒரெனெலா இரேஷா சில்வா அபுதாபியில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று முற்பகல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவரை கைது செய்து நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இதையடுத்து நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் அவரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்த நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.