வடமாகாண பொதுமக்களில் 99 வீதமானோல் நல்லொழுக்கம் கொண்டவர்கள் – ஒரு சிலரை வைத்து ஏனையோரையும் மதிப்பிடமுடியாது என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் தெரிவித்தார் .
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 1000ம் பேருக்கான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகள் மேலும் தெரிவிக்கின்றார்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் அவர் இவ்வாறு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
18-28 வயதுடைய ஆண் பெண் இருபாலாரும் குறித்த பொலிஸ் சேவையில் இணைய முடியும் எனவும், பொலிஸ் பற்றாக்குறையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களிற்கு ஒரு பொலிசார் எனும் அடிப்படையில் சேவைகளை வழங்குவதில் பெரும் இடர்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேலையற்ற பட்டதாரிகளிற்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய ஏற்பாடுகள் உள்ளதா என அவரிடம் கேட்டபோது, அதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அவ்வாறு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பில் அவர்களிற்கு பொருத்தமான பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாள்வெட்டு சம்பவத்துடன் கைது செய்யப்படும் இளைஞர்கள் தொடர்பிலும், அவர்களின் பின்னணியில் ஆயுத குழுக்கள் ஏதும் உள்ளதா எனவும் வினவியபோது, அவ்வாறு ஆயுத குழுக்களின் பின்னணி ஏதும் இல்லை குற்றம் இழைப்பவர்கள் மதுபோதையினாலும் தனிப்பட்ட பிரச்சினைகளாலுமே இழைக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
வடமாகாணத்தில் உள்ள மக்களில் 99 சதவீதமானோர் நல்லொழுக்கம் கொண்டவர்கள் எனவும், ஒரு சிலரது செயற்பாடுகளால் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.