சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் தொழில் புரிந்த தனது மகள் 6 மாதங்களின் பின்னர் சவப்பெட்டியில் நாடு திரும்பியதை நினைத்து குறித்த பெண்ணின் தந்தை மிகவும் மனவேதனையடைந்துள்ளார்.
பதுளை – பசறை பிரதேசத்தை சேர்ந்த ஷெல்டன் அல்விஸ் என்பவர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் குறித்த பெண்ணின் சடலத்தைக் கண்டு அழுதுள்ளார்.
மகள் தொழில் புரிந்து வந்த வீட்டின் உரிமையாளரான அரேபிய இனத்தவரான பொலிஸ் அதிகாரி, அவருடைய வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளமை தனது மகளின் மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கைவிரல்கள் காயம் ஏற்படும்படி வெட்டி, கைக்கு சூடு வைக்கப்பட்டிருந்த படத்தை மகள் தொலைபேசியின் ஊடக அனுப்பியிருந்தார்.
இது சம்பந்தமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது தனது மகளின் சடலத்தை நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஷெல்டன் அல்விஸ் கட்டுநாயக்க விமான பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இலக்கம் 25 அத்கம் நிவச, அரலியகொட பசறை என்ற முகவரியில் வசித்து வந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான தினுஷி பிரியங்கா மஹேஷி டி அல்விஸ் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது கணவன் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது கணவனை பிரிந்து தனது தந்தையின் பாதுகாப்பில் குழுந்தைகளுடன் வாழ்ந்து வந்த இந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் தஹாம் நகரில் கதீப் என்ற பகுதியில் உள்ள வீடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் நல்ல முறையில் தொழில் புரிந்து விட்டு ஒரு மாத விடுமுறையில் இலங்கை வந்து, மீண்டும் சவூதியில் உள்ள அந்த வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இரண்டு மாதங்கள் பிள்ளைகளின் செலவுக்கான பணத்தை அனுப்பிய பின்னர் தொலைபேசி அழைப்பை கூட எடுக்கவில்லை.
இதனையடுத்து ஷெல்டன் அல்விஸ், தனது மகளின் நிலைமை குறித்து தேடிய போது, அவரை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்த முகவர் மகள் இறந்து விட்டதாக கடந்த 8ஆம் திகதி அறிவித்துள்ளார்.
சவூதியில் உயிரிழந்த தினுஷி பிரியங்காவின் சடலம் நேற்று அதிகாலை 5.50 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
சடலத்தை பொறுப்பேற்ற உறவினர்கள் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தினுஷி தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் பல முறை தன்னை தாக்கி, துஷ்பிரயோகம் செய்து உணவு எதுவும் கொடுக்காது அறை ஒன்றில் மூடி வைத்ததாக மகள் கூறியதாகவும், மகளை இலங்கைக்கு வரவழைக்க தனது பணத்தில் விமான பயணச்சீட்டை அனுப்பிய போதிலும் மகள் சவப்பெட்டியிலேயே திரும்பி வந்ததாகவும் ஷெல்டன் அல்விஸ் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்
SHARE Facebook
Twitter