தனது மகளின் தங்க ஆபரணங்களை அபகரித்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் தப்பிச்சென்ற பெண்ணொருவர் தொடர்பில் அப்பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
29 வயதுடைய சந்தேக நபரான பெண் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் நுவரெலியாவில் வசித்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபரான பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இவ்வாறு நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றிருந்த நிலையில், அவர் தனது கள்ளக் காதலனுடன் அளுத்கம தர்கா நகரின் பதிராஜகொட பிரதேசத்தில் வசித்து வருவதாக கிடைத்த தகவலொன்றுக்கமைய அப்பெண்ணின் சட்டரீதியான கணவர் அப்பிரதேசத்துக்கு சென்று கடந்த ஒரு வாரமாக தேடிய போதும் அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்காததையடுத்து அவர் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மனைவி இவ்வாறு நகைகளைக் கொள்ளையிட்டு சென்றுள்ளமை தொடர்பில் பெண்ணின் கணவர் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள அதேவேளை, அளுத்கமை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் சந்தேக நபரான பெண் வசித்து வருவதாக கூறப்பட்ட வீட்டுக்குச் சென்ற பெண் பொலிஸார், அவ்வீட்டை சோதனையிட்ட போது அப்பெண் அங்கு இல்லாதிருந்த காரணத்தால் அவ்வீட்டில் இருந்த வேறொரு நபரிடம் பீ அறிக்கையொன்றை சமர்ப்பித்து அந்நபர்களை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அறிவித்து சென்றுள்ளனர்.
அதன்போது குறித்த வீட்டிலிருந்து சட்டவிரோதமாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரான பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பாக துபாய் சென்று பணியாற்றிவந்துள்ள நிலையில் அங்கு பணியாற்றிவந்த அளுத்கம பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் தொடர்பை பேணி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பெண் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில் 12 வயதான தனது மகளின் தங்க ஆபரணங்களை எடுத்துக் கொண்டு வெளிநாட்டில் பழக்கமான கள்ளக்காதலனுடன் அளுத்தகம பிரதேசத்துக்குத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில், தான் ஒரு பலகை வர்த்தகர் எனவும், தனது மனைவி வெளிநாடு செல்வதற்கான எந்த தேவையும் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், தனக்கு தனது மனைவி தேவையில்லை எனவும் மகள் பெரியவளானவுடன் அவருக்கு கொடுப்பதற்காக சிறுக சிறுக சேமித்து அப்பணத்தில் வாங்கி வைத்திருந்த நகைகளை மட்டும் மீட்டுத்தருமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபரான பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் நேற்றைய தினம் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.