புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ள நிலையில் ஊடகங்களினூடாக மக்களை தவறாக நடத்துவதை நிறுத்துமாறு பிரதமர் இன்று (19) கோரிக்கை விடுத்தார்.
மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் நாட்டில் இல்லாத நிலையில், புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மகாசங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகக் கல்லூரி அடங்கலான மூன்று நிறுவனங்கள் நடத்திய ஆய்வு அறிக்கை இன்று பாராளுமன்ற குழு அறையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர்,
உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்று வருகிறோம். யாப்பு தயாரிக்கும் பணிகளை முன்னெடுப்பது குறித்து அடுத்த வாரம் விவாதம் நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் மக்களின் கருத்தறிக்கையில் இன்று கையளிக்கப்பட்ட அறிக்கையையும் கவனத்தில் கொள்வோம்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கதேரர்கள் பங்கேற்காத கூட்டமொன்றில், நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லை என தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீடமகாநாயக்கர்களின் படங்களுடன் அநேக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்படி இரு பீடங்களினதும் மகாநாயக்கர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.மல்வத்துபீடத்தின் மகாநாயக்கர் இதன் போதுநாட்டில் இருக்கவில்லை.
மக்களை தவறாக வழிநடத்துவது யார்? புதன்கிழமை ஊடகங்களிலும் அதேபோல் இன்று (19) அனைத்து பத்திரிகைகளிலும் நான் பார்த்தேன். அனைத்து ஊடகங்களும் மல்வத்துபீட மகாநாயக்கரின் படத்தை பிரசுரித்திருந்தன.
நான் இன்று அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் இலங்கையில் இல்லை. பின்னர் எப்படி அந்த படம் வரமுடியும்?
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் கூட்டத்திற்கு அவ்விரு மகாநாயக்கர்களும் சென்றிருக்காததுடன் மட்டுமல்லாது,மல்வத்து பீடாதிபதி நாட்டிலேயே இருக்கவில்லை. இவ்வாறான நிலையில்,உண்மையை திரிபுபடுத்தும் வகையிலான செய்திகள் வெளியிடப்பட்டன.
அரசியலமைப்பொன்று இன்னும் உருவாக்கப்படவில்லை என்று ஜனாதிபதியும் நானும் கூறுவதை மல்வத்து பீடமகாநாயக்க தேரர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு கண்டி, தியவதன நிலமேயினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், மகாநாயக்கர்களின் படங்களுக்கு பதிலாக அவரின் படமே பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும். கூறியிருந்தால் அந்த செய்தியை வெளியிடுங்கள். இல்லாத ஒன்றை பிரசுரிக்க வேண்டாம்.
அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையொன்றை வழங்கியிருக்கும் நிலையில் அதை நிறைவேற்ற வேண்டாம் என்ற ஊடகங்கள் தெரிவிக்கின்றன . இவ்வாறான விளையாட்டுக்களை நடத்தாதீர்கள் என்றார்.