பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் சொந்த ஊரான நாலந்தாவின் அஜய்பூர் என்ற கிராமத்தில், அரச உதவி ஒன்றைப் பெறும் எண்ணத்தில் ஊராட்சித் தலைவரது வீட்டுக்கு வயோதிபர் ஒருவர் சென்றார்.
கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்ததால் கடும் கோபம் கொண்ட ஊராட்சித் தலைவர் அவரது செயலைக் கீழ்த்தரமாகத் தண்டிக்க நினைத்தார்.
அதன்படி, அம்முதியவரை வீட்டுக்கு வெளியே நிற்கவைத்து, அவரை எச்சில் துப்ப வைத்து அதை அவரே தன் நாவால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு பணித்தார். ஊராட்சித் தலைவர் என்ற அச்சத்தில் குறித்த முதியவர் அவ்வாறே செய்தார்.
பின்னர், ஊராட்சித் தலைவர் தன் வீட்டுப் பெண்களை விட்டு காலணிகளால் அம்முதியவரை அடிக்கச் செய்திருக்கிறார்.
இச்சம்பவம் காணொளியாகக் கசிந்ததையடுத்து, அதனுடன் தொடர்புடைய எட்டுப் பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.