“திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருப்பதால் கிரமத்திற்கு தீட்டு பட்டு விட்டதாகவும், அதனால் சுத்திகரிப்பு சடங்கு செய்யக் கூறி கிராம மக்கள் வற்புறுத்தி வருகிறார்களாம்.
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் பழங்குடியினர் பயிலும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பள்ளியின் தலைமை ஆசிரியரே கற்பழித்த கொடூரம் இந்த மாதம் துவக்கத்தில் நிகழ்ந்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து அந்தக் குடும்பம் வெளி வருவதற்குள் அடுத்த பிரச்னை அவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.
45 வயதான அந்தத் தலைமை ஆசிரியர் சிறுமியை வற்புறுத்தி தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள செய்ததாகவும், அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்தவுடன் சிறுமியின் தந்தையிடம் தானே அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் வாக்களித்துள்ளார்.
இதை நம்பி அந்தச் சிறுமியின் குடும்பமும் எந்த ஒரு புகாரும் தரவில்லை.
ஆனால் பின்புதான் அவர் தங்களை ஏமாற்றுகிறார் என்பதை உணர்ந்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தனர். தலைமை ஆசிரியரைக் கைது செய்து காவல் துறையும் நடவடிக்கை எடுத்தது.
சிறுமி கருவுற்று ஐந்து மாதங்கள் ஆனதால் மருத்துவர்கள் கருகலைப்பு செய்வது சிறுமியின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால் குழந்தையை பெற்றெடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அந்தச் சிறுமி உள்ளார்.
இப்போது புதிய பிரச்னையாக சிறுமி திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருப்பதால் கிராமத்திற்கு தீட்டு பட்டுவிட்டதாகவும், அதனால் சுத்திகரிப்பு சடங்கு செய்யக் கூறி கிராம மக்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
சிறுமியின் தந்தையோ “நான் ஒரு கூலி தொழிலாளி, என் மகளின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பிள்ளை பேறுக்கும் நான் செலவு செய்ய வேண்டி உள்ளது.
இந்த நிலையில் நான் எப்படி ரூ.30,000 செலவு செய்து சடங்கு செய்ய முடியும்?” என்று கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளார். கிராம மக்கள் சடங்கு செய்யாததால் தன்னையும், தனது குடும்பத்தையும் ஒதுக்குகிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இதுபோன்ற கற்பழிப்புகளால் கருவுற்ற பெண்களின் ஆரோக்கியத்திற்காக அரசாங்கம் குறிப்பிட்ட அளவு பண உதவி செய்யும்.
ஆனால் இது கற்பழிப்பு என்பதையும் தாண்டி ‘சட்டவிரோதமான உறவு’ என்ற அடிப்படையிலும் வழக்கு நடைபெறுவதால் உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.