சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து விளக்கமறியலில் வைப்பது தொடர்பாக, கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சட்ட மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும், இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச கடந்தவாரம் நாடு திரும்பியிருந்தார். அப்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில், அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் சில அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான வழக்கிலேயே கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார்.
அதேவேளை, தம்மை விரைவில் கைது செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நகர்வுகள் குறித்து கோத்தாபய ராஜபக்சவும் அறிந்திருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.