கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டு மாயமானதாகக் கூறப்பட்ட இந்தியச் சிறுமி ஷெரின் மரணமடைந்துவிட்டதாக அமெரிக்கக் காவல்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமி உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு போலீஸார் உறுதிபடுத்தியுள்ளனர். அவர் காணாமல் போன இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலம் அச்சிறுமியுடையதுதான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, அக்டோபர் 7ம் தேதி இரவு பால் குடிக்க அடம்பிடித்ததால் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே நிற்க வைத்த போது குழந்தை காணாமல் போனதாகக் கூறிய தந்தை, குழந்தை சடலமாக மீட்கப்பட்ட பிறகு தனது வாக்குமூலத்தையே மாற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வளர்ப்புத் தந்தை மேத்யூஸ், குழந்தையை பால் அருந்த வைத்தபோது புரையேறி, மூச்சு விடுவது நின்று போனதால் குழந்தை இறந்துவிட்டதாகக் கருதி, உடலை அப்புறப்படுத்திவிட்டேன் என்று தற்போது தெரிவித்துள்ளார்.
மரணமடைந்த ஷெரின் பற்றிய தகவல்கள் மனதை உருகச் செய்வதாக உள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிகார் மாநிலம் கயாவில், அனாதையாக விடப்பட்ட ஷெரின், மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
அப்போதுதான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ் – சினி மேத்யூஸ் தம்பதியினர், ஷெரினை தத்தெடுத்தனர்.
அவர்கள் தங்களுடன் ஷெரினையும் அமெரிக்கா அழைத்துச் சென்றனர். மேத்யூஸ் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகளும் இருக்கிறார்.
விசாரணையின் போது குழந்தை ஷெரின் பற்றி வெஸ்லி கூறுகையில், தாங்கள் ஷெரினை தத்தெடுத்துக்கும் போது, வளர்ச்சிக் குறைபாடு கொண்ட மற்றும் போஷாக்குக் குறைந்த குழந்தையாக இருந்தார்.
அதனால், அவருக்கு சிறந்த உணவுகளை தயாரித்து கொடுத்து வந்தோம். அவர் நள்ளிரவில் எப்போது எழுந்தாலும் உணவு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
ஷெரின் காணாமல் போனது பற்றி புகார் அளித்த போது மேத்யூஸ் கூறியதாவது, நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு சென்று 15 நிமிடத்தில் மீண்டும் வந்த பார்த்த போது ஷெரின் இல்லை.
அக்கம் பக்கத்தில் அவளை தேடியபோதும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு வந்து வேலைகளை செய்து கொண்டிருந்தேன். காலையில் அவளை தேடும் பணியில் ஈடுபடலாம். அல்லது அதற்குள் அவளே வீட்டுக்கு வந்துவிடலாம் என்று கருதினேன் என்று தெரிவித்திருந்தார்.
குழந்தை காணாமல் போன 5 மணி நேரத்துக்குப் பிறகே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், ஷெரினின் வளர்ப்புத் தாயும் கைதாக வாய்ப்பு?
இந்த வழக்கில் ஷெரினின் வளர்ப்புத் தாயும் கைதாகலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குழந்தை காணாமல் போன போது சினி மேத்யூஸ் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறியிருந்தார். அதே சமயம், குழந்தை பற்றிய தகவல்களைக் கொடுக்கவோ, காணாமல் போனது குறித்து விளக்கம் அளிக்கவோ அவர் மறுத்துவிட்டார்.
வழக்கை விசாரிக்கும் எஃப்பிஐ, வீட்ல் இருந்தும், அவர்களது வாகனத்தில் இருந்தும் பல பொருட்களை கைப்பற்றியுள்ளது.
கயாவில் அனாதையாக விடப்பட்ட சிறுமியின் வாழ்க்கை, அமெரிக்காவில் முடிந்துள்ளது. சிறுமியின் மரணம் உலக மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.