இதற்கு முன் இப்படி ஒரு தமிழ்ப் படம் வந்தது இல்லை என்ற வகையில் கன்டென்ட்டிலும் படத்துக்கான ப்ரமோஷனிலும் திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் ‘2.0’ படக்குழுவினிர்.
அதில் ஒரு பகுதிதான் துபாயில் நடந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழா. அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் பேசியதிலிருந்து…
தனுஷ்:
“இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய இசை வெளியீட்டு விழா இது. இதில் கலந்துகொள்வதில் பெருமை. இந்த இடத்தில் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல விரும்பறேன்.
ஒரு நடிகர் ஓரளவுக்கு வளர்ந்திட்டாலே ஆறு மணிக்கு பேக்கப்னா, நாலு மணிக்கே கிளம்பலாமானு இருக்கும் சூழல்ல, ரஜினி சார் காலையில் போயிட்டு நைட் 2 மணி வரை இருந்து எல்லாத்தையும் முடிச்சிட்டு, அதே ஸ்டைலோட, அதே சுறுசுறுப்போட கடகடனு நடந்து வருவார்.
அதைப் பார்க்கும் போது ஒரு விஷயம் புரிஞ்சது. நம்ம எல்லாரும் ஒரு உயரத்துக்குப் போனோம்னா, இது நடக்கணும், இது பண்ணணும்னு கஷ்டப்பட்டு உழைப்போம்.
ஆனா, சார் வந்து அந்த மாதிரி எதையும் எதிர்பார்த்துப் பண்ணல. தான் அன்னைக்கு செய்யற வேலையை முழுசா, உண்மையா செய்யணும்ங்கறதில் மட்டும் கவனமா இருப்பார்.
அதனாலதான் அவர் எதையும் தேடிப் போகலை. எல்லாமே அவரத் தேடி வருது. இந்த மாதிரி கடின உழைப்பு இருக்கும்போது இந்த மேடை, இதற்கு மேல ஒரு பெரிய மேடைனு எல்லாமே காத்திருக்கும்.
நம் துறைய தொடர்ந்து பெருமைப்படுத்திகிட்டிருக்க ஷங்கர் சார் இன்னைக்கு இவ்வளவு பெரிய புராஜெக்ட்டை நம்ம முன்னால நிறுத்தியிருக்கார்.
இன்னும் கடினமா உழைக்கணுங்கற உற்சாகத்தை ஷங்கர் சார் எல்லாருக்கும் கொடுக்கிறார். கண்டிப்பா இந்தப் படத்துக்கு ரஹ்மான் சாருடைய இசை மட்டும்தான் பொருந்தும். அப்பறம், அக்ஷய் சார், நீங்க ரஜினி சார் எதிர்ல நிக்கப்போறதை திரையில் பார்க்க காத்திட்டிருக்கேன்.”
ஏ.ஆர்.ரஹ்மான்:
‘2.0’வின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும்…
“ஜெண்டில்மேன் ஷங்கர் டூ 2.0 ஷங்கர்?”
அதே மாதிரிதான் இருக்கார். அதே டஃப், அதே ஜோவியல், தரமான விஷயம் கொடுக்கணும்னு நினைக்கறது.”
“உங்கள ஷங்கர் எப்பவாச்சும் கோபப்படுத்தியிருக்காறா?”
“நிறையவாட்டி. கோபம்னா அப்படி இல்ல… எதாவது புதுசா தரணும்னு நினைக்கறதால வர்றதுதான். பத்து ஐடியா முடிச்சிட்டு திரும்ப ஃபர்ஸ்ட் ஐடியாவுக்கே போவோம்.”
“நீங்க பண்ணியதில் ஒரு பாட்ட ஷங்கர் சாருக்கு டெடிகேட் பண்றதுன்னா என்ன பாட்ட சொல்வீங்க?”
“என்னவளே அடி என்னவளே…”
ஷங்கர்:
“2.0 படம், எந்திரனுடைய எக்ஸ்டன்ஷன் கிடையாது. வேற ஒரு கதைக் களம். க்ளோபல் மெசேஜ் ஒண்ணு இருக்கும்.
இதில் நமக்குப் பரிட்சையமான டாக்டர் வசீகரன், சிட்டி, 2.0 இவங்கள்லாம் இந்தக் கதைல வருவாங்க. ‘இப்படி நடந்தா எப்படி இருக்கும்’ங்கற கற்பனைதான் இந்தப் படம்.
அந்தக் கற்பனை எப்படி எல்லாம் என்னை இழுத்திட்டுப் போச்சோ அங்க எல்லாம் ட்ராவல் பண்ணியிருக்கேன். அது உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.
ரஜினி சார் ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டிருக்க நிலைமையில்கூட டெல்லியில் 47 டிகிரி ஹீட்ல, சூப்பர்மேன், பேட்மேன்ல வர்ற மாதிரி 12 கிலோ சூட் போட்டுகிட்டு பிரம்மாதமா நடிச்சுக்கொடுத்தார். அதுக்கு அவருக்கு நன்றி சொல்லியாகணும்.
அதேபோல திருக்கழுங்குன்றம்ல ஒரு பெரிய பள்ளம் தோண்டி அனிமேட்ரானிக்ஸ் வேலைக்காக ஒரு பாக்ஸ் உள்ள வெச்சு நடிக்கணும். அதையும் அவர் பண்ணிக் கொடுத்தார்.
இவ்வளவு வருஷம் நடிச்சும்கூட ஒரு ஷாட் எடுக்கறதுக்கு முன்னாடி எப்படிப் புதுசா பண்ணலாம், ஏற்கெனவே பண்ணா மாதிரி இருக்கக்கூடாதுனு மெனக்கெடுறார்.
அக்ஷய்குமாருக்கு ஒரு நாள் கூட சாதாரணமா வந்தமா, மேக் அப் போட்டு நடிச்சோமானு இருக்காது. தினமும் மூன்றரை மணிநேரம் மேக்கப் போகும், அதுக்கும்மேல ஹெவி காஸ்ட்யூம், வெயில் வேற… இத்தனை வருஷப் படங்களில் நடிச்ச கஷ்டம் எல்லாத்தையும் இந்த ஒரு படத்துக்காகப் பட்டிருக்கார்.
அதை நீங்க படம் பார்க்கும்போது உணர்வீங்க. படத்தில் மூணே பாட்டுதான் ஆனா, கிட்டத்தட்ட ஒன்றை வருஷம் அந்த மூணு பாட்டுக்காக உழைச்சிருக்கார் ரஹ்மான்.
பாடல்களைவிட பின்னணி இசைக்குப் பெரிய வேலை இருக்கு, அவருக்கு மட்டுமில்லாம, கேமிரா, சவுண்ட் டிசைனிங், ஆர்ட் டைரக்ஷன், எடிட்டிங்னு இதில் வேலை செய்த எல்லா டெக்னீஷியனுக்குமே பெரிய வேலை, பெரியபெரிய நன்றிகள்.
மதன் கார்க்கி எல்லாம் ஒரு குயர் நோட் அளவுக்கு எழுதியிருக்கார். இன்னொரு முக்கியமான விஷயம் நா.முத்துக்குமார் எழுதின கடைசி பாட்டு இந்தப் படத்தில் இருக்கு.
அவர்கிட்ட பாட்டுக்கான சூழலை மாலையில் சொன்னேன். காலையில் கால் பண்ணி “சார் நீங்க சொன்ன சூழல், என்ன தூங்கவே விடல, ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு உடனே மளமளனு எழுதிட்டேன்”னு சொல்லிக்கொடுத்தார்.
ஆனா, அந்தப் பாட்ட அவர் கேட்கவே இல்ல. அது ட்யூன் போட்டு எழுதின பாட்டு இல்ல, வரிகளை வைச்சு ரஹ்மான் அதற்கு ட்யூன் போட்டார், அந்த பாட்டுதான் ’புள்ளினங்காள்’.
விஷுவல் எஃபக்ட்ஸ்ல இருக்கிறவங்க இன்னும் போராடிட்டு இருக்காங்க. படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால இருந்தே விஷுவல் எஃபக்ட்ஸ் வேலைகள் போயிட்டிருக்கு.
வி.எஃப்.எக்ஸ் ஸ்ரீனிவாஸ் மோகன் டீம் இன்னும் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. படத்தின் ரோலிங் டைட்டில், எண்ட் கிரெடிட்ஸ்ல இருக்கிற எல்லார் பற்றியும் பேசினா விடியவிடிய பேசலாம். யாரை பற்றியாவது சொல்லாம மிஸ் பண்ணியிருந்தேனா அவங்களுக்கும் நன்றி.
‘ரஜினி கூட மூணாவது படம் பண்ணும் அனுபவம்?”
அவ்வளவு ஈஸியா நெருங்கிட முடியுமா சூப்பர்ஸ்டாரை. நாங்க படம் பண்ணலாம்னு பேசிப்பேசி பண்றதுக்கு பதினொரு வருஷம் ஆச்சு. நான் கூர்க்ல கதை விவாதத்துக்குப் போயிருந்தப்போ, ஒரு தம்பதியை சந்திச்சேன்.
`நீங்க இன்னும் பத்து வருஷம் முன்னாடி பிறந்திருக்கக்கூடாதா?’னு சொன்னாங்க. நான், ‘ஏங்க’னு கேட்டேன். `இல்ல… இன்னும் மூணு படம் சூப்பர்ஸ்டார்கூட பண்ணியிருப்பீங்களே’னு சொன்னாங்க. அந்த ஃபீலிங்தான் எனக்கும் இருக்கு.”
“ரஹ்மானுடன் பயணிக்கும் அனுபவம்?”
“எங்களுடைய ஃபர்ஸ்ட் பாட்டு சிக்கு புக்கு ரயிலே. அதுக்குப் பிறகு இவ்வளவு வருஷம் போயிட்டாலும், நாலஞ்சு வருஷம் ஆன மாதிரிதான் இருக்கு.”
“ரஹ்மானை கஷ்டப்படுத்தி வாங்கிய பாட்டு?”
“எல்லாமேதான். ரொம்ப கஷ்டம்னா இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ. ஏன்னா அது வழக்கமான சூழல்ல வர்ற பாட்டு கிடையாது.
ஒரு மெஷின் பொண்ண லவ் பண்றதுக்கு நியாயமான ம்யூசிக் வரணும்னு கஷ்டம் இருந்தது. அதே போல 2.0ல மெஷினுக்கும் மெஷினுக்கும் லவ் வந்தா என்ன பாடுவாங்கனு ஒரு பாட்டு இருக்கு, அதுதான் எந்திர லோகத்து சுந்தரியே.”
“ரஹ்மான் சார் எவ்வளவோ தெலுங்கு பாட்டு பண்ணியிருக்கார். ஆனா, நீங்க மட்டும் ஏன் சார் தெலுங்குல நேரடியா எடுக்காமா டப்பிங் மட்டும் கொடுக்கறீங்க?”
“தெலுங்கு பிக்சர்தாண்டி இப்போ இந்தியன் பிக்சர் பண்ணிட்டிருக்கேன். ஆந்திராகூட இந்தியாவில்தானே இருக்கு. அதனால இந்தப் படம் எல்லாருக்குமானது.”
ரஜினிகாந்த்:
“40 வருஷ சினிமா வாழ்க்கை சீக்கிரமா ஓடிடுச்சு. எனக்கென்னமோ நாலஞ்சு வருஷம் மாதிரிதான் இருக்கு. பணம், பேர், புகழ் எல்லாம் ஓரளவுக்குதான் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
ஆரம்பத்தில் மட்டும் சந்தோஷத்தைக் கொடுக்கும், அதுக்குப் பிறகு சதோஷத்தைக் கொடுக்காது. ஆனா, அது இல்லாதப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும். அது ரொம்ப வேடிக்கையான விஷயம். என் 40 வருஷ சினிமா வாழ்க்கை எனக்குக் இதைக் கற்றுக் கொடுத்திருக்கு.
`ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்குத்தான் தெரியும்’னு உங்களைப் பற்றிய கட்டுரையில் எழுதியிருப்பாங்க. நீங்க சொல்லுங்க ரஜினியா இருக்கறது எப்படி இருக்கு?”
“கடவுள் நம்பிக்கை இல்லன்னா, கஷ்டமா இருந்திருக்கும். அது இருக்கறதால கொஞ்சம் சுலபமா இருக்கு.”
“ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?”
“நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்க. நல்ல கலைஞர்களை உற்சாகப்படுத்துங்க. படம் சுமாரா இருந்ததுன்னா, ஷோஷியல் மீடியா யூஸ் பண்ணி மற்றவங்களுடைய மனச நோகடிக்கறமாதிரி பண்ணாதீங்கனு அன்போட கேட்டுக்கறேன்.”
FIRST TIME EVER: Namma STR Interviews Sai Dhanshika | STR Episode