சென்னை: ப்ளூடூத் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய ஐ.பி.எஸ். அதிகாரி ைகது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகியையும் போலீசார் கைது செய்து ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் 985 பதவிகளை நிரப்புவதற்கான மெயின் தேர்வு கடந்த சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி(புதூர் பள்ளி), அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1) தேர்வு நடந்தது.
எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி சப் டிவிஷன் ஏ.எஸ்.பியாக உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த சபீர் கரீம் தேர்வு எழுதினார்.
இவர் தேர்வு மையத்தில் ப்ளூடூத் மூலம் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஐதராபாத்தில் உள்ள மனைவி ஜோசி சபீரிடம் பதில் கேட்டார்.
அவர் அங்கிருந்தபடியே ப்ளுடூத் மூலம் பதில் அளித்தார். அப்போது சபீர் கரீம் கையும் களவுமாக மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தமிழக போலீசார் உதவியுடன் பிடித்தனர்.
அதேபோன்று கேள்விக்கு பதில் கூறிய மனைவியையும் ஐதராபாத் போலீசார் உதவியுடன் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்தனர்.
மேலும் இந்த மோசடிக்கு உதவியதாக ஜோசி சபீர் நடத்தி வரும் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகி ராம்பாபு(30) என்பவரையும் பிடித்தனர்.
பின்னர் இவர்கள் மூன்று பேர் மீது எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சபீர் கரீமை நேற்று முன்தினம் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற 14வது மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஐதராபாத்தில் சிக்கிய சபீர் கரீம் மனைவி ஜோசி சபீர் மற்றும் அவரது நண்பரும் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாகியுமான ராம்பாபுவையும் கைது செய்து அழைத்து வர நேற்று முன்தினம் மாலையே தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படையினர் விமானம் மூலம் ெசன்றனர்.
பின்னர் ஐதராபாத் போலீசாரிடம் இருந்து ஜோசி சபீர் மற்றும் ராம்பாபுவை மீட்டு தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் ஐதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.