தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் மற்றுமொரு பிளவு ஏற்பட்டுள்ளமை பகிரங்கமாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக செயற்பட்டு வரும் இலங்கை தமிழரசுக்கட்சியானது ஏதேச்சதிகாரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் அக்கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அறிவித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பூரணமான அங்கீகாரத்துடனும், ஆதரவுடனும் 2001 அக்டோபர் 20 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளையும் உள்ளடக்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
கூட்டமைப்பானது தேர்தல்களில் போட்டியிட்டு வடக்கு கிழக்கு மக்களின் அதிகளவான ஆணைகளைப் பெற்று பெரும்பான்மை தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை கொண்ட தரப்பாக இதுவரையில் இருந்து வருகின்றதோது 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருக்கின்றது.
இந்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசுரியன் சின்னத்தில் 2001 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.
அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லவும் இலங்கை தமிழரசுக்கட்சியை முன்னிலைப்படுத்தி அதன் சின்னமான வீட்டுச் சின்னத்தில் அடுத்து வந்த தேர்தல்களுக்கு இக்கூட்டமைப்பு முகங்கொடுத்தது.
இந்நிலையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வௌியேறியது.
அதனையடுத்து புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்து கொள்ளவும் நான்கு கட்சிகளைக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருந்த நிலையில் கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும், வௌிப்படைத்தன்மையுடன் கொள்கைரீதியான முடிவுகளை எடுத்துச் செயற்படவேண்டும் போன்ற கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஈ.பி.ஆர்.எல்.பிற்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அவ்வப்போது சில முரண்பாடுகள் எழுந்திருந்தன.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்ற போது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிப்பின்போது இருதரப்பினருக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் மேலும் வலுத்தன.
அதனையடுத்து தொடர்ந்து வந்தகாலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பு, ஐ.நா.வில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கால அவகாசத்தினை வழங்குதல், புதியஅரசியலமைப்பு விவகாரம் போன்ற விடயங்களில் இந்த முரண்பாடுகள் உச்சத்தினை அடைந்து இருதரப்பினரும் பரஸ்பரம் பகிரங்கமாக விமர்ச்சிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.
அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையிலும் இணைந்து கொண்டது.
இதுதொடர்பாகவும் தமிழரசுக்கட்சி கடுமையான விமர்சனத்தினையே கொண்டிருந்தது.
இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்பிற்குள் நடைபெற்று வந்த தமிழரசுக்கட்சி மற்றம் ஈ.பி.ஆர்.எல்.எப்.இற்கு இடையிலான பனிப்போர் தற்போது பகிரங்கமாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கிற்கு முன்னதாக கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் கொள்கை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக தமது கட்சியளவில் தீர்மானம் எடுத்திருந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.பினால் கோரப்பட்டடிருந்து.
எனினும் இரு நாள் கருத்தரங்கின் ஆரம்பநாளன்று மாலையிலேயே ஒருங்கிணைப்புக்குழு நடைபெற்றது.
அதில் ஈ.பி.ஆர்.எல்..இன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் பங்கேற்றிருக்கவில்லை. அதேநேரம் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த அக்கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தமிழரசுக்கட்சியினருடன் கடுமையாக முரண்பட்டிருந்தார்.
அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப்.தரப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கும் புறக்கணிக்கப்பட்டது.
இதனையடுத்து கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கருத்தரங்கில் பங்கேற்காதவர்களுக்கு இடைக்கால அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்ற இடமளிப்பதில்லை என்றும் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தனக்கு நேர ஒதுக்கீட்டை வழங்க மறுக்கின்றார் என்று சிவசக்தி ஆனந்தன் எம்.பி பகிரங்கமான குற்றச்சாட்டைச் செய்து அரசியலமைப்பு தலைவர் கருஜெயசூரியவிடத்திலும் முறைப்பாட்டினை செய்திருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷின் கருத்து
இவ்வாறு முரண்பாடுகள் வலுத்து பகிரங்கமாகியுள்ள நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் ஏதேச்சதிகாரமாக செயற்படுகின்றது. ஒரு ஜனநாயக கட்டமைப்பாக இருந்த கூட்டமைப்பினை தமது கொள்கைகளுக்கு ஏற்ற ஒரு தரப்பாக இட்டுச் செல்லும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.
பல சந்தர்ப்பங்களில் நாம் அதனை சுட்டிக்காட்டிருந்தோம். கூட்டமைப்பினுள் இருந்து கொண்டு நடைபெற்ற பல கலந்துரையாடல்களில் பங்கேற்று இவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.
எமது அடிப்படைக் கொள்கைகளிலிருந்து, மக்கள் ஆணை வழங்கிய விடயத்திலிருந்து நாம் விலகிச் செல்லமுடியாது என்பதை எத்தனையோ சந்தர்ப்பத்தில் கூறிவந்தோம்.
இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சுட்டிக்காட்டியபோதும் அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து வந்துள்ளது.
அத்தகைய நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாத்தில் எமது கட்சியின் செயலாளரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன் எம்.பியினை உரையாற்றுவதற்கு இடமளிப்பதில்லை என்று மிலேச்சத்தனமாக முடிவு எடுக்கின்றார்கள்.
இடைக்கால அறிக்கை தொடர்பில் மக்களுக்கு ஒரு கருத்தையும் அரசாங்கத்தினை பாதுகாக்கும் வகையிலும் கருத்துக்களை முன்வைக்கும் செயற்பட்டிலேயே இலங்கை தமிழரசுக்கட்சி இருக்கின்றது.
அத்தகைய ஒருவிடத்திற்கு நாம் ஆதரவளித்து வரலாற்றுத் தவறினை இழைக்க முடியாது.
இவ்வாறு தமது கட்சியை முன்னிலைப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நடத்திச் சென்றவர்கள் ஏனைய பங்காளிக்கட்சிகளை முடக்கும் வகையில் செயற்பட்டதை தாண்டி தற்போது அடக்குமுறைகளையும் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
அத்தகைய இலங்கை தமிழரசுக்கட்சியுடன் எவ்வாறு இணைந்து பயணிக்க முடியும் என்பதே எமது கேள்வியாகின்றது.
உள்ளுராட்சி தேர்தலில் தனித்தே போட்டி
இவ்வாறான நிலையில் நாம் ஒரு தேர்தல் கூட்டுக்காவோ அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னத்துக்காகவே அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தனியாக போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
அதேநேரம் எமது கொள்கைகளுடன் இணைந்து செயற்படக் கூடிய தரப்புக்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் ஒரு முன்னணியாகவும் நாம் போட்டியிடவதற்கு தயாராகவே இருக்கின்றோம். எனினும் அது தொடர்பான தீர்மானங்கள் அத்தகைய காலகட்டங்களில் முடிவெடுக்கப்படும் என்றார்.
அதிக உறுப்பினர்களுக்கு விரும்பமில்லை
இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கருத்தரங்கில் கலந்து கொள்ளாதவர்களுக்கு இடமளிப்பதில்லை என்று பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
ஆகவே பாராளுமன்றக் குழுவின் தீர்மானித்தினை உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட விடயத்திற்காக மாற்ற முடியாது என கூட்டமைப்பின் அதிகளவான உறுப்பினர்கள் விரும்புவதால் நேர ஒதுக்கீட்டை சிவசக்தி ஆனந்தன் எம்.பிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவது அதிகம் சாத்தியப்படாததாகவே இருக்கும் என கூட்டமைப்பின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் இந்த கருத்தினை அதிகளவிலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் மேலும் பாராளுமன்றக்குழுவின் தீர்மானம் மாற்றப்படுமாயின் எதிர்காலத்திலும் இவ்வாறு கட்டுக்கோப்பற்ற நிலைமையொன்று ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
ஈ.பி.ஆர்.எல்.எப்.பங்கேற்காது.
இந்நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆசனப்பங்கீடு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்க மாட்டாது. அதேநேரம் இக்கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்பிலான விடயங்களும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
9இல் பாராளுமன்றக்குழு கூட்டம்
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவசர பாராளுமன்றக் குழு கூட்டமொன்று இன்று நடைபெறவிருந்தபோதும் சில உறுப்பினர்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பவுள்ளதால் அக்கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டள்ளது.
அத்துடன் இக்கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் எம்.பி விடயம் மற்றும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்த விடயங்கள் தொடர்பாக அதிகளவிலான அவதானம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.