தமிழ் மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு,செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அரசாங்கம் வரவு, செலவுத் திட்டத்தை தயாரித்திருக்கிறது.
அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம், தமிழ் மக்களுக்கு ஓரளவு நன்மை பயக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே அதன் பயனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவது உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு முன்வைத்திருந்த யோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு, வேலைவாய்ப்பு, மாற்றுதிறனாளி பெண்களுக்கான வீடுகள், கணவனை இழந்த பெண்களுக்கான தேவைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை கருத்திற்கொண்டு அவற்றுக்கான முதலீடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த யோசனைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.