சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோது, கடல் அலையில் சிக்குண்டுச் சென்ற இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள அதேவேளை, மற்றொரு மாணவன் காணாமல் போயுள்ளார்.
சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் நேற்றுச் சனிக்கிழமை மாலை வேளையில், கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் நீராடிக் கொண்டிருந்தபோது, இருவர் கடல் அலையில் சிக்குண்டு, தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இன்னும் மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறி, வீடு போய் சேர்ந்துள்ளனர்.
சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனே காணாமல் போயுள்ளார்.
இவரைத் தேடும் பணிகளை, மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினர் முன்னெடுத்து அதேவேளை, கல்முனை பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.