ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மொசூல் நகரின் போர்ச் சுவடுகளை ட்ரோன்மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது, ஆங்கில ஊடகம் ஒன்று.
ஈராக்கின் மொசூல் நகரம், மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை அழகிய நிலப்பரப்பாகக் காட்சியளித்தது. கடந்த 2014-ம் ஆண்டு, நகரின் பெரும் பகுதிகளை ஐ.எஸ் அமைப்பு ஆக்கிரமித்தது. மொசூல் நகரை ஐ.எஸ் பிடியிலிருந்து மீட்க, ஈராக்-அமெரிக்கா கூட்டுப் படைகள் கடந்த 3 ஆண்டுகளாக சண்டையிட்டுவந்தன.
ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டைகளில், பொதுமக்களும் அவர்களின் உடைமைகளும் அழிந்ததுதான் மிச்சம். இரு தரப்பினர் இடையே நடந்த தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல், சுமார் 9,20,000 பேர் தங்கள் சொந்த மண்ணை விட்டு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் மொசூல் நகரம் முழுமையாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுவிட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி, உலக அரங்கில் அறிவித்தார்.
ஆனால், மொசூல் நகரில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் விட்டுச்சென்ற தடங்கல் அப்படியேதான் இருந்தன. கல்லூரி, பள்ளி, மருத்துவமனை, குடியிருப்புப் பகுதிகள் என அனைத்து கட்டடங்களும் தகர்க்கப்பட்டுவிட்டன. மொசூல் நகரின் ஒரு பகுதியை ஆங்கில ஊடகம் USA Today ட்ரோன்மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை அழகிய நிலப்பரப்பாகக் காட்சியளித்த தொன்மையான மொசூல் நகரம் சீர்குலைந்து காட்சியளிக்கிறது. நகரின் மறு கட்டமைப்புப் பணிகள் நடைபெறும் என ஈராக் அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் மொசூல் நகரின் பிரபல பொழுதுபோக்குப் பூங்கா, 3 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டு, குழந்தைகள் துள்ளி விளையாடும் காட்சி இணையத்தில் வைரலானது. அக்காட்சி, மொசூல் நகர் மீண்டும் உயிர்பெற்றுவிடும் என்னும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது!