இன்று பிரபாகரனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார்.
கட்சிகளை உடைக்காது 2020 இற்குள் தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாட்டினை அவர் முன்னெடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சில கட்சிகள் வெளியேறி மாற்றுக்கட்சியினை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
மாற்றுக்கட்சி உருவாகுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்;
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச்சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.
மரணச்சான்றிதழை வழங்கினால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
தற்போது பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார்.
கட்சிகளை உடைக்காது 2020 ற்குள் தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்.
வடகிழக்கில் தமிழீழம் கோரி எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து அந்தப் போராட்டம் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எமது தமிழீழ,விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.
போர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.
அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
யுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று எமது தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே எமது நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக தலைவராக உருவாகியுள்ளார்.
தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால் இன்னுமொரு 30 வருடத்தினை எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் ஆயுதங்களை தந்தால் பழைய யுத்த நிலைக்கு வரமாட்டோம். எத்தனை பிறவி எடுத்தாலும் அதை மீண்டும் செய்ய முடியாது.
அது பொய்யான கூற்று. சிலருக்கு சில ஆசைகள் இருக்கின்றன. அதற்காக சில கட்சிகளைஉடைத்து விடுகின்றார்கள்.
அதற்கு இடமளிக்காது. இன்று உள்ள தலைவர்கள் இனவாதம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். நாளை அமையப் போகும் தலைவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் இனவாதிகளாகவே இருப்பார்கள்.
இனவாதிகளுடன் பேச முடியாத காரணத்தினால் இங்குள்ள சிறு சிறு கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைக்கவும் கூடாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் மதிக்கத்தக்கவராக இருக்கின்றார். ஆகையினால் சம்பந்தனின் ஊடாகவே எமது மக்களின் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வர முடியும்.
வடகிழக்கு இணைப்பையே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீர்வு திட்டத்தில் முன்வைத்துள்ளார்.
இன்று வடகிழக்கு இணைப்பு ஏற்படக்கூடாதென்று நாங்கள் எங்களுக்குள் அடிபடும் நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். அதற்கு இடமளிக்காது.
எமது சிறு சிறு கட்சிகள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் சம்பந்தன் அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து நடப்பது போன்று சிறு சிறு கட்சிகள் விட்டுக்கொடுத்து இவற்றின் ஊடாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்