காக்கா முட்டை’ படத்தில் நடித்து அதன் மூலம் ஃபேமஸானவர் ரமேஷ். அந்தப் படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்த இவர் அதன்பிறகு கோலிவுட்டில் இருக்கும் அனைவராலும் ‘காக்கா முட்டை’ ரமேஷ் என்றே அறியப்பட்டார்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இவர் கோபி நயினார் எடுத்திருக்கும் ‘அறம்’ படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். ‘அறம்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றித் தெரிந்து கொள்ள சின்ன காக்கா முட்டை ரமேஷிடம் பேசினோம்.
‘என் சொந்த ஊர் சென்னைதான். அப்பா மீனவர், அம்மா வீட்டில்தான் இருக்கிறார். எனக்கு இரண்டு அண்ணன்கள். நான்தான் வீட்டில் கடைக்குட்டி. இப்போ ஒன்பதாவது படிச்சிட்டே சினிமாவிலும் நடிச்சிட்டு வரேன்.
நான் ஐந்தாவது படிக்கும் போதுதான் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்தேன். எங்க வீடு கடலையொட்டிதான் இருக்கும். ஸ்கூல் லீவு அன்னைக்குக் கடலில் விளையாடிக்கிட்டு இருந்தேன்.
அப்போ, படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக டைரக்டர் மணிகண்டன் சார் எங்க ஏரியாவுக்கு வந்தார். அப்போ என்னைப் பார்த்துவிட்டு என்னை நடிக்க வைக்க முடிவு பண்ணிட்டார். பட், என்கிட்ட அவர் எதுவும் பேசலை. நேராக, எங்க வீட்டுக்குப் போய் அம்மா, அப்பாக்கிட்ட கேட்டார்.
எங்க அப்பாவுக்கு என்னை சினிமாவுக்கு அனுப்புறதுக்கு விருப்பம் இல்லை. எங்க அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடித்திருந்தது. அதனால் அம்மா, அப்பாவை சமாதானப்படுத்தி ஓகே வாங்கிட்டாங்க. நானும் நடிக்க வந்தேன்” என்று சொல்லி சிரிக்கிறார் சின்ன காக்கா முட்டை ரமேஷ்.
’’ ‘காக்கா முட்டை’ படத்தில் நடிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. அதுவரைக்கும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாருமில்லை.
அந்தப் படத்தை பார்த்து ஏரியாவில் இருக்கிற நிறையப் பேர் பாராட்டினாங்க. அந்தப் படத்தில் நடிச்ச போதுதான் முதல்முறை பீட்சா சாப்பிட்டேன். அப்போவே எனக்கு பீட்சா பிடிக்கவில்லை.
அதனால் அதற்கு அப்புறம் எப்பவும் பீட்சா சாப்பிடணும்னு எனக்கு ஆசை வரவேயில்லை’’ என்றவரிடம் தனுஷை ‘காக்கா முட்டை’ படத்துக்குப் பிறகு பார்த்தீங்களா என்றால்,
”அவரை சமீபத்தில் எங்கும் பார்க்கவில்லை. எனக்கான படிப்பு செலவை வெற்றிமாறன் சார் ஏத்துக்கிறேன்னு சொன்னார். எந்த ஸ்கூல்லில் படிக்க விருப்பம்னு என்கிட்ட கேட்டார்.
நான் எப்போதும் போல அரசுப்பள்ளியில்தான் படிப்பேன்னு சொல்லிட்டேன். எனக்கு இங்கிலீஷ் பேசுற ஸ்கூல் எல்லாம் பிடிக்காது’’ என்றவரிடம் ‘அறம்’ படத்தின் வாய்ப்பு எப்படி வந்தது என்றோம்.
‘டைரக்டர் கோபி சார் எங்க ஏரியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் மீஞ்சூரில் இருக்கிறார். எல்லோரும் டைரக்டர் சாரை பத்தி சொல்லியிருக்காங்க. பட், நான் பார்த்ததில்லை.
ஒருநாள் கோபி சார் என்கிட்ட வந்து, ”டேய் தம்பி என்கிட்ட ஒரு கதையிருக்கு. நான் கதை சொல்றேன். உனக்குப் பிடிச்சிருந்தா பண்ணு” னு சொன்னார்.
கதை கேட்டேன். ரொம்ப ரொம்ப பிடிச்சிருச்சு. உடனே ஓகே சார்னு சொல்லிட்டேன். அவர் என்கிட்ட கதை சொன்னபோது நயன்தாரா கலெக்டர் வேஷத்தில் நடிக்கிறாங்கனு தெரியாது.
ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்னுக்கிட்டு இருந்தேன். அப்போ பார்த்தா பெரிய கேரவன் எல்லாம் வந்துச்சு. ‘யாரு டா வர போறா”னு பார்த்தேன்.
ஒரு காரில் நயன்தாரா வந்து இறங்குனாங்க. எனக்கு அவங்களைப் பார்த்ததே ஷாக். அதுவும் நயன்தாரா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். எனக்கு அப்போ ஒரு மாதிரி ஆயிருச்சு. ஒரு பக்கம் அவ்வளவு சந்தோஷம். அவங்ககிட்ட ஏதாவது பேசலாம்னு நினைச்சேன். பட், பேச்சே வரல காத்து மட்டும்தான் வந்துச்சு.
‘அறம்’ படம் நயன்தாராகூட நடிச்சது செம ஹாப்பி. படத்தில் குழிக்குள்ளே இறங்கிற சீன் அப்போதான் எனக்கு ரொம்ப பயமாக இருந்துச்சு. உண்மையாவே குழிக்குள்ளே இறங்குற அப்போ மூச்சேவிட முடியலை. அந்த சீனுக்கு ஒரு ஆறு டேக் எடுத்தேன்.
அப்புறம் ஏழாவது டேக் ஓகே ஆயிருச்சு. ‘அறம்’ படத்தை தியேட்டரில் பார்க்கும் போது என் அம்மா, அப்பா அழுந்துட்டாங்க. ரொம்ப நல்லா பண்ணியிருக்கனு சொன்னாங்க. என் மாமா போன் பண்ணி விஷ் பண்ணினார்.
இந்தப் படத்தில் என்கூட பெரிய காக்கா முட்டை விக்னேஷூம் நடிச்சிருக்கார். ‘காக்கா முட்டை’ படத்தில் நடிக்குறதுக்கு முன்னாடி இருந்தே நானும் விக்னேஷும் ஃப்ரெண்ட்ஸ்தான். எனக்கு அண்ணா,ஃ ப்ரெண்ட் இரண்டுமே அவர்தான்.
இன்னைக்கு அவருக்குப் பிறந்தநாள். அதனால், ஸ்கைவாக் கூப்பிட்டு போய் சஸ்பென்ஸாக கேக் வெட்டலாம்னு இருக்கேன். இதை அவன்கிட்ட சொல்லிறாதீங்க’’ என்று கண்ணடிக்கிறார் சின்ன காக்கா முட்டை.