நடிப்புத்துறையில் தான் கால்பதித்த ஆரம்ப காலத்தில் தான் நிர்வாணமாக வரிசையில் நிற்க வைக்கப்பட்டதாக ஹொலிவூட்டின் முன்னிலை நடிகை ஜெனிபர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
27 வயதான ஜெனிபர் லோரன்ஸ், சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை வென்றவர். ஹொலிவூட்டில் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் ஒருவராக அவர் விளங்குகிறார்.
எனினும், நடிப்பதற்கு வந்த ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புக்காக தான் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹொலிவூட்டில் நிலவும் சமத்துவமின்மை, பாலியல் தொந்தரவுகள் குறித்தும் துணிச்சலாக பேசி வரும் அவர், அண்மையில் நிகழ்த்திய உரையொன்றின்போது தனது அனுபவங்களை வெளிப்படுத்தினார்.
”அப்போது நான் மிக இளம் வயதில் இருந்தேன். அது எனது ஆரம்ப காலம். வேறு சில பெண்களுடன் நிர்வாணமாக வரிசையில் நிற்குமாறு நான் கோரப்பட்டேன்.
இல்லாவிட்டால் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் 2 வாரங்களில் 15 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 3000 ரூபா) ஊதியத்தையும் இழக்க நேரிடும் என தயாரிப்பாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
தயாரிப்பாளரான பெண் ஒருவருக்கு முன்னால் சுமார் 5 பெண்களுடன் நான் நிர்வாணமாக நின்றேன். எமது அந்தரங்கப் பகுதிகளை மாத்திரம் ஒரு நாடாவினால் (டேப்) மறைத்திருந்தார்கள் என ஜெனிபர் லோரன்ஸ் கூறியுள்ளார்.
இதேவேளை, படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் ஒருவரின் முறையற்ற வார்த்தைகளுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததால் பட வாய்ப்பை இழக்கும் அச்சுறுத்தலை தான் எதிர்நோக்கியதாகவும் அண்மையில் நடைபெற்ற நடிகைகளின் கலந்துரையாடல் ஒன்றில் ஜெனிபர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
எம்மா ஸ்டோன், அலிஸசன் ஜென்னி, மேரி பிளிஜ், ஜெசிக்கா, சோய்ர்ஸ் ரொனன் ஆகியோரும் ஜெனிபர் லோரன்ஸுடன் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
இதன்போது ஜெனிபர் லோரன்ஸ் கூறுகையில், ஒரு தடவை படப்பிடிப்புத் தளமொன்றில் இயக்குநர் தகாத வகையில் கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நான் தீர்மானித்தேன்.
ஆனால், நான் குளியலறை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, தயாரிப்பாளர்களில் ஒருவர், என்னை நிறுத்தி, நான் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதாகவும் நான் கூறியவை ஒலிவாங்கியில் பலருக்கும் கேட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.
ஆனால், அது உண்மையல்ல. அப்போது நான் பட வாய்ப்புகளை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டேன். எனிமேல் என்னை நடிப்பதற்கு அழைக்க மாட்டார்கள் என அஞ்சினேன்.
இவ்வாறான நிலை காரணமாகத்தான் பாலியல் தொல்லைகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு பலர் அஞ்சுகின்றனர் என நான் கருதுகிறேன்” என்றார்.