என் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன் என ஜெயலலிதா மகள் என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த அம்ருதா தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி, மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாகவும் ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டை அணுகாமல் நேரடியாக நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
அம்ருதாவுக்காக ஆஜரான வக்கீல் பாதுகாப்பு காரணங்களுக்காக தாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.
இதை தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
ஜெயலலிதா மகள் என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த அம்ருதா தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு அனுமதி கேட்டேன். விரைவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். என் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டு வந்தேன்.
ஜெயலலிதா எனது தாயார் என்பது கடந்த மார்ச் மாதம் தான் எனக்கு தெரிய வந்தது. ஜெயலலிதாவின் மகள் நான்தான் என எனது குடும்பத்தினர் அனைவரும் கூறினர்.