காதலன் தன்னை ஏமாற்றி உல்லாசம் அனுபவிப்பதற்காக விடுதி ஒன்றுக்கு அழைத்து செல்வதற்கு மறுப்புத் தெரிவித்த யுவதி ஒருவர், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 21 வயதான யுவதியே காயமடைந்துள்ளதாகவும், அவரது காதலனான வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் இருவரும் கேகாலை நகரில் சந்தித்துள்ளனர். அதன்போது, தனது காதலியிடம் குறித்த இராணுவ வீரர், முதலில் அமைதியான இடமொன்றுக்கு சென்று பேசிக் கொண்டிருப்போம் என தெரிவித்துள்ளார்.
நகரிலுள்ள பூங்கா ஒன்றுக்கு காதலன் தன்னை அழைத்துச் செல்வார் என்ற எண்ணத்தில் யுவதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர் குறித்த யுவதியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பூங்காவை நோக்கி செல்லாமல் வேறு திசையாக பயணித்துள்ளார்.
பூங்காவுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர் என யுவதி வினவவே, ‘அங்கு செல்வதால் எவ்வித பயனும் இல்லை நாம் விடுதி ஒன்றுக்கு செல்வோம் என தெரிவித்துள்ளார்.
அதன்போது தனது காதலனின் சூட்சுமத்தை அறிந்து கொண்ட யுவதி, விடுதிக்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், யுவதியின் பேச்சைக் கேட்காமல், விடாப்பிடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தாது இராணுவ வீரர் பயணத்தை தொடர்ந்துள்ளார்.
காதலனிடமிருந்து தப்பிப்பதற்காக யுவதி கூச்சலிட்டதுடன், காதலனை கெஞ்சிக் கேட்டு அங்கு செல்லவேண்டாம் எனப் போராடி தன்னால் இயலாத கட்டத்தில், அரணாயக்க – கல்பொக்க பிரதேசத்தில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே பாய்ந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
அதனையடுத்து, அவரது காதலன் அயலில் இருந்தவர்களின் உதவியுடன், படுகாயமடைந்த யுவதியை கேகாலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடொன்றுக்கமைய சந்தேக நபரான இராணுவ வீரரை கைது செய்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் கேகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.