அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்தனர்.
வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் இல்லை. அங்கு அசம்பாவதங்கள் ஏற்படாதிருக்க காவல்துறையினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் குழப்பம்
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி, பருத்தித்துறை சாலை பஸ் சேவை இடம்பெற்றதால், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில், சற்று முன்னர் குழப்பநிலை ஏற்பட்டது.
ஊழியர்களை இடமாற்றக் கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே, குறித்த வழித்தடத்துக்கான பஸ் சேவை இடம்பெற்றமைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், அரச பஸ் சேவைகள் அனைத்தும், இன்று (28) வடக்கில் முற்றாக முடங்கியுள்ளன.
இதனால் யாழ். மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையில், பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் இடம்பெற்ற குழப்பநிலையைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.