ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இது தொடர்பாக இரண்டு கட்சிகளும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் கூட்டு அரசாங்கத்தை முறித்துக்கொள்ளும் நிலைமை உருவாகுமாக இருந்தால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடமளிக்காது தங்களின் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பக்கமுள்ள எம்.பிக்கள் சிலரை தம்பக்கம் இணைப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 31ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பாக கூடி தீர்மானமெடுக்கவுள்ளது.
2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்களும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும் , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இரண்டு ஆசனங்களும், ஜே.வி.பிக்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்தன.
இதன்படி எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைத்திருக்கவில்லை. இதனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்தப்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 2017 டிசம்பர் 31ஆம் திகதி வரை கூட்டு அரசாங்கத்தை தொடர்வதற்கும் அதற்கு பின்னர் தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்து. இந்த ஒப்பந்தமே எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் குழுவொன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் அதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமென்றால் கட்சி அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென கடந்த சில மாதங்களாக கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தரப்புக்குள்ளும் சிலர் அதிருப்திகொண்டுள்ளதுடன் அரசாங்கத்திலிருந்து விலகி தனித்து அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.
இல்லையேல் எதிர்க்கட்சியாக இருப்போம் என அழுத்தும் கொடுத்து வந்தனர். இவ்வாறான நிலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது டிசம்பர் 31ஆம் திகதி வரை அரசாங்கத்தில் இருக்குமாறு கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களில் அந்த ஒப்பந்தம் முடிவடையவுள்ளது. தற்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் கட்சியில் சிலர் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அதன்மூலமே தேர்தலில் வெற்றிப் பெற முடியுமெனவும் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று மேலும் சிலர் அரசாங்கத்தில் பிரதான அதிகாரங்களை வைத்துக்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது இதனால் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரங்கள் இருப்பதனாலும் நாட்டின் தலைவராக அவர் இருப்பதனாலும் அதனை வைத்துக்கொண்டு தங்களால் பயணிக்க முடியுமெனவும் இதனால் அரசாங்கத்திலிருந்து விலகவதால் பிரச்சினைகள் வராது எனவும் அவர்கள் தெரிவித்துதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கட்சியை அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென கடுமையான அழுத்தங்களை கொடுத்த போதும் அது தொடர்பாக கட்சி நடவடிக்கையெடுக்காத காரணத்தினால் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதவளிக்க தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் மத்திய செயற்குழு இது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக கூடவுள்ளது.
அங்கு அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு முடிவு எடுக்கப்படுமாக இருந்தால் உடனடியாக எதிர்தரப்பிலிருந்து உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ளவர்களையும் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பக்கமுள்ள சிலரையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் தயாராகவே இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரான லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்க 7 ஆசனங்களும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிமைக்க 18 ஆசனங்களும் இன்னும் மேலதிகமாக தேவையாக உள்ளன.
இவற்றில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவுமாக இருந்தால் அந்த கட்சி இலகுவாக அரசாங்கத்தை அமைத்துவிடும்.
ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பது தொடர்பான அறிவித்தல் எதனையும் விடுத்ததில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.
எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் குறியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக ஆதரவு கிடைப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துவிடக் கூடாது என்பதற்காகவே தாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டி வந்ததாக சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் அந்த கட்சி உறுதியாக உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.