காலா பட ரஜினி கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார். ‘தில்லுமுல்லு’ ரஜினி நக்கலாக சிரிக்கிறார். துப்பாக்கியுடன் ‘கபாலி ரஜினி முறைக்கிறார்.
ராஜாதிராஜா, படையப்பா, மனிதன், தளபதி என விதவிதமான போஸ்களில் திரும்பிய பக்கம் எல்லாம் சுவர்களை சூப்பர் ஸ்டார் அலங்கரிக்கிறார்.
ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே மெனு கார்டை புரட்டினால், அங்கேயும் ராஜாதி ராஜா பீட்சா, நான் சிகப்பு மனிதன் பீட்சா, அண்ணாமலை பீட்சா என அனைத்துமே சூப்பர் ஸ்டார் நடித்த பட டைட்டில்கள்தான்.
நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான சென்னையை சேர்ந்த ராமநாதன், தன் பீட்சா கடைக்கு ”சூப்பர் ஸ்டார் பீட்சா’ எனப் பெயர் வைத்ததுடன் அனைத்தையும் சூப்பர் ஸ்டார் மயமாகவே மாற்றியுள் ளார்.
வணக்கம் என ஒரு குரல் நம்மைப் பார்த்து ஒலிக்க, பதிலுக்கு வணக்கம் சொல்லி அறிமுகங்களை முடித்துக் கொண்டோம். பார்ப்பதற்கு தில்லுமுல்லு படத்தில் வரும் இந்திரன் போல க்ளீன் ஷேவில் இருந்தார் ராமநாதன்.
அவரிடம் பேசிய போது…“வழக்கமாக ஒரு ரசிகரோ ரசிகர் பட்டாளமோ தங்கள் மனம் கவர்ந்த சினிமா ஹீரோ நடித்த திரைப்படம் வெளியாகும் போதும், அந்த நடிகருக்கு பிறந்தநாள் வரும் போதும், அவருக்கு போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவது, ரசிகர் மன்றம் அமைப்பது, பால் அபிஷேகம் செய்வது, முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது, திரையில் அவர் ஆடும் போதும் பாடும் போதும் நடிக்கும் போதும் விசில் அடித்து ஆரவாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். இதுபோன்ற ரகிகர்களைத்தான் நாம் இதுநாள் வரையில் பார்த்திருப்போம்.
ஆனால் இவை அனைத்திற்கும் கிரீடம் சூட்டுவதுபோல சூப்பர் ஸ்டார் மீதான என் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். அதன் வெளிப்பாடுதான் இந்த பீட்சா கடை!
சென்னைதான் என்னுடைய பூர்வீகம், எல்லோரையும்போல பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே ரஜினிகாந்த் என்றால் கொள்ளை இஷ்டம். அவர் சிரிப்பு, நடிப்பு, வசன உச்சரிப்பு, ஸ்டைல் என அவரை எனக்குப் பிடித்துப்போகப் பல காரணங்கள் உண்டு.
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி ஐ.டி. கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். காலை, மாலை, இரவு என ஷிஃப்ட் கணக்கில் நேரம் காலம்கூடப் பார்க்காமல் வேலை பார்த்தது உண்டு.
அப்படியே ஆறு வருடம் ஓடி விடவே அந்த இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, தலைவர் பாணியில், நான் எப்போதும் என் மனசுக்கு பிடிச்ச வேலைய மட்டும்தான் செய்வேன் என்பதற்கு ஏற்றபடி என் பணியை மாற்றிக்கொள்ள விரும்பினேன்.
அப்போதுதான் மேலை நாடுகளில் இருப்பதுபோல ஏதேனும் ஒரு பிரபலமான தீம் ஒன்றை மையப்படுத்தி உணவகம் ஒன்றை ஆரம்பிக்க நினைத்தேன்.
அந்த நேரத்தில் கையில் கொஞ்சம் சேமிப்பு இருக்கவே, தலைவர் பெயரிலேயே ஆரம்பித்து விடலாம் என முடிவு செய்து சூப்பர் ஸ்டார் பீட்சாவை ஆரம்பித்தேன்.
படையப்பா படத்தில் ரஜினி சொல்லும் என் வழி தனி வழி வசனத்தைப் பின்பற்றி சூப்பர் ஸ்டார் பீட்சாவை இந்தியாவின் தனி பிராண்டாக உருவாக்கினேன்.
மேலை நாடுகளின் பீட்சா நிறுவனங்களோடு கூட்டுச்சேராமல் நான் தனித்துவமாக இயங்க வேண்டுமென்ற எனது எண்ணத்திற்கு சூப்பர் ஸ்டார் பீட்சா கை கொடுக்கும் கையாக அமைந்தது.
கடையின் உட்புற சுவர், டேபில் என திரும்புகிற எல்லா பக்கமும் ரஜினிகாந்தின் நிழற் படங்களும் அவர் பேசிய வசனங்களும் வரைந்தோம்.
அதேபோல பீட்சாவின் பெயர்களும் தனித்துவமான இந்திய ஸ்டைலில் இருக்க வேண்டுமென எண்ணியதால், தலைவர் நடித்த படங்களின் பெயர்களையே பீட்சாவிற்குப் பெயராக வைத்தோம்.
அண்ணாமலை பீட்சாவில் பால், பன்னீர் அதிகமாக இருக்கும். பணக்காரன் பீட்சா மெனு கார்டிலேயே அதிக விலைக்குக் கொடுக்கிறோம். அருணாச்சலம் பீட்சா, மூன்று முகம் பீட்சா என வரிசையாகப் பீட்சாவின் லிஸ்டை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுக்கும் பீட்சா ருசியாகவும் ப்ரெஷ்ஷாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகப் பீட்சாவில் சேர்க்கப்படும் இன்க்ரீடென்ட்ஸ் அனைத்துமே அன்றாடம் கடைகளில் வாங்கி வந்து தயாரிக்கிறோம்.
ஒலிவ் ஆயில், பன்னீர், சீஸ் அனைத்துமே உள்ளூரில் இருக்கும் பால் பண்ணைகளிலிருந்து வாங்கி வருகிறோம்.ஒரு தொழிலைத் தொடங்கும்போது எல்லோரும் சந்திப்பது போல் எனக்கும் சூப்பர் ஸ்டார் பீட்சாவை ஆரம்பித்த போது நிறையச் சிக்கல்கள், இடையூறுகள் இருந்தன.
மின்வெட்டு, சரியான ஊழியர்கள் கிடைக்காதது எனப் பல்வேறு சிக்கல்கள். அந்த நேரத்தில் கஷ்டப்படாமல் எதுவுமே கிடைக்காது என்கிற தலைவரோட வசனம்தான் கைகொடுத்தது.
கொஞ்ச நாளில் அனைத்துமே சரிவரவே சூப்பர் ஸ்டார் பீட்சாவை விரிவு செய்தேன். அப்படியே நண்பர்களும் என்னுடைய முயற்சிக்கு ஆதரவு தரவே தமிழகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் பீட்சாவை விரிவு செய்யலாம் என யோசனை தந்ததோடு அவர்களாகவே அவர்களது ஊரில் அமைக்கவும் விருப்பம் தெரிவித்தனர்.
சென்னை பெசன்ட் நகரில் தொடங்கியது தற்போது திருச்சி, குமரன்நகர் மற்றும் தில்லைநகர், சேலம் நியூ பேர்லேண்ட், கோவை சாய்பாபா காலனி என வெவ் வேறு ஊர்களுக்கும் கிளை களாக விரிந்துள்ளது.
கடந்த டிசெம்பர் 12 ஆம் திகதி சூப் பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடியபோது அந் நாளை ஸ்டைல் டே எனக் கொண் டாடியுள்ளோம் என்றவர் மகிழ்ச்சி” எனக் கபாலி ஸ்டைலில் பேசி முடித்தார் ராமநாதன்.