உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியல் களம் எப்படியான மாற்றத்தைச் சந்திக்கும் என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இப்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா? இல்லையா? என்பதே முதற் கேள்வியாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. அதனை இரண்டு கட்சிகளும் புதுப்பிக்கவில்லை.
உடன்பாட்டை நீடிப்பது தொடர்பான ஆவணம் ஏதும் தனக்கு அனுப்பப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜய சூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கம் பதவியில் இருப்பதைக் காரணம் காட்டியே அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரித்து வைத்திருக்கிறது.
முன்னதாக இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்போம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தது. பின்னர் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, அமைச்சரவை அந்தஸ்துள்ள 30 அமைச்சர்களை மாத்திரமே அரசாங்கம் நியமிக்க முடியும்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்தில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 46 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்களை விட, 23 இராஜாங்க அமைச்சர்களும், 21 பிரதி அமைச்சர்களும் உள்ளனர்.
ஒரு தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை பாராளுமன்றத்தின் மூலம், வரையறை செய்ய முடியும் என்று 19 ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போதைய கூட்டு அரசாங்கம், 45 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களையும், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆகவும் வைத்துக் கொள்ள முடிவு செய்தது.
கூட்டு அரசாங்கம் தொடர்பான உடன்பாடு நீடிக்கப்படாவிடின், அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க வேண்டும் என்பது கூட்டு எதிரணியின் வாதமாக இருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தான், கூட்டு அரசாங்கம் தொடர்பான உடன்பாட்டை நீடிப்பதா -இல்லையா என்று முடிவெடுக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போது இரட்டை எதிரிகள். ஐ.தே.க ஒன்று, மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றொன்று.
இந்த இரண்டு எதிரிகளையும் வீழ்த்தி, உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றியைப் பெறும் கடினமான இலக்குடன் பயணிக்கிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எந்தவொரு கட்சியிடம் தோல்வியுற்றாலும், அது கட்சிக்குள் குழப்பத்தையும், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்துக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும்.
ஐ.தே.க. பலமடைந்தால், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் பலவீனமானது என்ற கருத்து கட்சிக்குள் மேலோங்கும். அது மஹிந்த ராஜபக் ஷவின் தலைமைத்துவத்தை நோக்கி கட்சியினரை சாயச் செய்யும்.
அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ அணி வெற்றி பெற்றாலும் கூட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதில் இனிப் பயனில்லை என்று பலரும் வெளியேறும் நிலை ஏற்படலாம்.
அப்படியான நிலையில், ஆட்சியைத் தொடர்வதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் ஐ.தே.க.வுடன் உடன்பாட்டை நீடித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படும்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துச் செயற்படுவதா, கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பதா என்று முடிவு செய்யப் போகிறது.
கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பதாயின், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டை அதிகாரபூர்வமாக நீடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நீடிக்காமல் கூட்டு அரசாங்கம் 46 அமைச்சர்களை பதவியில் வைத்திருக்க முடியாது.
அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க முடிவெடுத்தால், இரண்டு பிரதான கட்சிகளுமே ஆட்டம் காணும். அமைச்சர் பதவியை இழப்பவர்கள், எதிர் அணிக்கு ஓடிச் செல்லக் கூடிய அபாயம் இருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வுகளுமே, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும், பல எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்.
இதனால் தான், பல முக்கியமான விடயங்களில் முடிவுகளை எடுக்காமல் ஆறப் போட்டு வருகிறது அரசாங்கம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட பல சமயங்களில் சாதாரண அரசியல்வாதிகளின் நிலைக்குக் கீழ் இறங்கி விடுகிறார். பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களைத் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்.
நிதி முகாமைத்துவத்தை கையில் எடுத்துக் கொள்ளப் போவதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அவ்வாறு நிதி முகாமைத்துவத்தை ஜனாதிபதியின் கையில் எடுத்துக் கொள்வதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்கிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
தவறு செய்தவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பேன். அதனைச் செய்த பின்னரே பதவியை விட்டு விலகுவேன் என்று மற்றொரு சபதமும் எடுத்துள்ளார் ஜனாதிபதி.
தவறு செய்தவர்கள் முன்னைய அரசாங்கத்தில் மாத்திரமல்ல இப்போதைய அரசாங்கத்திலும் இருக்கிறார்கள். அதனை ஜனாதிபதியும் கூட ஏற்றுக் கொள்கிறார்.
ஏனென்றால், முன்னைய அரசாங்கத்தினதும், இப்போதைய அரசாங்கத்தினதும் திருடர்கள் ஒன்று கூடிப் பேசி, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தான், ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள் என்று அவரே கூறியிருக்கிறார்.
அவர்களை நோக்கி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற விவாதத்தை உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியுமா என்று அப்பாவித்தனமாக சவால் விடுவதையும் காண முடிகிறது.
நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக இழக்காத ஜனாதிபதி, இப்படி ஒரு சவாலை பகிரங்கமாக விடுக்கும் அளவுக்கு பலவீனமானவராக காணப்படுகிறார்.
தமது தரப்பில் யாரும் தவறு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர், ஏனைய இரண்டு தரப்புகளின் திருடர்களையும் அடையாளப்படுத்துவதற்கு முனைகிறார்.
அதேவேளை, அவரது தரப்பிலும் திருடர்கள் உள்ளனர் என்று நிரூபிக்கும் ஆவணங்களுடன் ஐ.தே.க.வின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள். குழுவொன்று தயார் நிலையில் இருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற விவாதம் நடத்த தயாரா என்று ஜனாதிபதி எழுப்புகின்ற கேள்வி, அவரை ஒரு ஆளுமையுள்ளவராக அதிகாரம் படைத்தவரான தோற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, சாதாரண அரசியல்வாதியாக சவால் விடுவதான தோற்றப்பாட்டையே காண்பிக்கிறது.
கூட்டு அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாயினும், இந்தக் கூட்டு தொடர வேண்டும் என்ற எண்ணம் தலைவர்களுக்கு மத்தியில் இருக்கிறது. அதனை இன்னமும் பல அமைச்சர்களும் வெளிப்படுத்துகின்றனர்.
அதேவேளை, இந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு தனித்து ஆட்சியமைப்போம் என்ற கருத்தில் இருப்பவர்களும் உள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தக் கூட்டு அரசாங்கம் தொடர வேண்டியது அவசியம்.
ஏனென்றால், அவர்கள் பதவிக்கு வரும் போது கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கூட்டு அரசாங்கத்தை விட்டு நழுவுவது தமது அரசியல் செல்வாக்கைப் பாதிக்கும் என்று அவர்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய போது, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டே அரசியலில் இருந்து விலகுவேன் என்று கூறியிருந்தார்.
அடுத்த பதவிக்காலத்துக்கும் அவர் அடித்தளம் போடுகிறார் என்ற கருத்துக்களை இது வலுப்படுத்தினாலும், கொடுத்த வாக்குறுதிகளைத் தான் காப்பாற்றவில்லை என்ற எண்ணம் அவருக்குள் இருப்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அவ்வாறு தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டுமாயின், தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தோல்வியடைந்தால், அந்த வாக்குறுதியை ஜனாதிபதியால் காப்பாற்ற முடியாது.
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலிலும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற சிக்கல் இரண்டு கட்சிகளின் தலைமைகளுக்கும் உள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மோதிக்கொள்ளும் இந்தக் கட்சிகள், தேர்தலுக்குப் பின்னரும் இதே போக்கைத் தான் கடைப்பிடிக்குமா என்பதைப் பொறுத்தே, அரசாங்கத்தின் உறுதித்தன்மை அமைந்திருக்கும்.
இந்தநிலையில், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்தை அவ்வளவாக தட்டிக்கழித்து விட முடியாது என்ற நிலையே இப்போது காணப்படுகிறது.