புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும் சமஷ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது அதில் அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், முஸ்லிம் மக்களுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்து பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது. அதில் நாம் எல்லோரும் பங்கெடுக்கவேண்டும். எல்லோரும் ஒன்றிணையவேண்டும். தந்தை செல்வாவின் கருத்துக்கள் தமிழ் முஸ் லிம் மக்களுக்கு சார்பாகவே இருந்தன, அதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
செல்வா – – பண்டா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி டட்லி – – செல்வா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றே உள்ளது. ஆகவே வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒத்துழைத்து ஒருவரின் உரிமையை ஒருவர் மதித்து நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும்.
இடைக்கால அறிக்கையில் இணைப்பு இடம்பெறலாம். இடம்பெறாமல் இருக்கலாம். இணைப்பு நடைபெறுவதாக இருந் தால் சர்வஜன வாக்கெ டுப்பு இடம்பெறவேண் டும் என்ற 3 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் அது சமஷ்டி முறையிலான ஆட்சிமுறை யாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சமஷ்டிக்கு பொருத்தமான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக மத்தியிலும் மாகாணத்திலும் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
எனவே அதில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அது தொடர்பில் நாம் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றோம்.
இதை தூக்கி எறிந்து விட்டு இதில் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலை தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து எமக்கு ஏற்புடையதாக மக்களுக்கு ஏற்புடையதாக மாற்றவேண்டியது எமது பொறுப்பாகும். ஆகவே அந்த பொறுப்பை நிறைவேற்றாமல் கவனயீனமாக இருக்கமுடியாது என்றார்.