இறுதித்தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தில் இணையமாட்டோம் என்கிறார் சம்பந்தன்
எமது தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று வரும் வரையில், எமது மக்க ளின் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும் வரையில் நாம் அரசாங்கத்தில் சேரப்போவ தில்லை. எமது மக்கள் எதற்காக இந்த அரசாங்கத்தைஆதரித்தனரோ அவை பூரணப்படுத்தப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று எதிர்க் கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
யுத்த குற்றங்களை மறைக்கும் வகை யில் அரசாங்கம் செயற்படக்கூடாது, உண்மைகளை கண்டறியவும் பொறுப்புக்கூறவும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றது. மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது; கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டது, இவ்வாறான ஒரு ஆட்சி மாற்றம் இடம்பெறும் என அப்போதைய ஆட்சியாளர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். அவ்வாறன மாற்றம் ஒன்று இடம்பெற்றது அவர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் பாராளுமன்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது கூட்டணி அரசாங்கத்தை இரண்டு பிரதான கட்சிகளும் முன்னெடுத்து செல்கின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கம் தொடர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.
அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் ஊடக இந்த நாட்டின் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்துச்சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அரசாங்கமும் மக்களால் அகற்றப்பட்டது.
இப்போது சர்வாதிகார போக்கு இல்லாத, மனித உரிமைகளை மதிக்கும் வகையில், சிவில் சமூகங்கள் சுதந்தரமாக இயங்கும் வகையில், காணாமல் போகும் விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறாத வகையில் நல்ல முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
பாராளுமன்றம் அரசியல் அமைப்பு சபையாக மாற்றப்பட்டு பொதுமக்கள், நிபுணர்கள் கருத்துக்களை ஆராய்ந்து பல ஆலோசனைகளின் படி புதிய அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். அதேபோல் முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச சமூகம் இப்போது எமது விவகாரங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முதல் முறையாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது தமிழர் பிரதிநிதிகளாக நாங்கள் சர்வதேச நாடுகளுக்கு சென்று இலங்கையின் நிலைமைகளை விளக்கி, இலங்கையில் யுத்த அழிவொன்று இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டி, இலங்கை அரசாங்கத்தின் போக்கை சுட்டிக்காட்டி நிலைமைகளை எடுத்துரைத்து சர்வதேச ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்திய காரணத்தினால் இவ்வாறான ஒரு தீர்மானம் அப்போது முன்வைக்கப்பட்டது.
இதன் பின்னர் தொடர்ச்சியாக இந்த விடயங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கருத்தில்கொண்டு செயற்பட்டு வருகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி வழங்கியுள்ளது.
இதில் உண்மைகளை கண்டறிதல், பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும், மக்களுக்கு பரிகாரம் அவசியம், மீள் கட்டுமானங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும், நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் சுட்டிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை என்ன செய்துள்ளது என்பதை ஆராயவும் விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
இவற்றின் பின்னணியில் தான் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு தனி முக்கியத்துவதை பெற்றுள்ளது. பிரதமர், ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் மும்முனை களத்தில் இறங்கியுள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி பல காரணிகளை முன்வைத்து வருகின்றார்.
இதில் ஒற்றை ஆட்சி தொடர வேண்டுமா அல்லது தமிழீழம் மலர வேண்டுமா என்ற முடிவை இந்தத் தேர்தல் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அதாவது சிந்திக்கப்பட்டு வரும் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டால் அது தமிழீழம் ஒன்றுக்கு வழிகோலும் என்பதே அவரது கருத்தாகும்.இது உண்மையற்ற ஒரு விடயம்.
நாங்கள் ஒருமித்த நாட்டுக்குள், பிரிக்கப்படாத நாட்டுக்குள் எமது ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டு, எமது இறையாண்மையின் அடிப்படையில், எமது உரிமைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாம் செயற்பட வேண்டும்.
எமது உள்ளக உரிமைகள் முழுமையாக கிடைக்கபெற வேண்டும் என்பதையே நாம் கேட்டு வருகின்றோம். ஒற்றையாட்சியை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இந்த தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றனர் என்று நாட்டின் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கொள்கையில் உறுதியாக உள்ளனரா இதில் மாற்றம் கண்டுள்ளனரா அல்லது கொள்கையின் இறுக்கம் அதிகரித்துள்ளதா என்பதை பார்த்துக்கொண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில் தான் நாம் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.
இந்த தேர்தல் நாட்டுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும். தமிழ் மக்கள் பொறுமையாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை உணர்த்த வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதை சர்வதேசம் அறிந்துகொள்ளும் வகையில் நாம் செயற்பட வேண்டும்.
மேலும் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், பொறுப்புடன் செயற்படவில்லை எனவும் ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல, நாம் அமைச்சர்களாக இருக்கவும் இல்லை. எமது தேசிய பிரச்சினைக்கு நிரந்தத தீர்வு ஒன்று வரும் வரையில், எமது மக்களுக்கு ஜனநாயக தீர்வுகள் கிடைக்கும் வரையில், நாம் அரசாங்கத்தில் சேரப்போவதில்லை.
ஆனால் முன்னைய அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் உணர்ந்துள்ளோம். இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர பாரிய பங்களிப்பை எமது மக்கள் செய்துள்ளனர்.
ஒரு நோக்கத்திற்காக எமது மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். ஆகவே அந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற எம்மாலான அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம்.
இந்த அரசாங்கத்தின் மூலமாக கணிசமான நல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பூரணப்படுத்தப்படவில்லை. அவை நிறைவேற்றப்பட வேண்டும்.எமது மக்கள் பல காலமாக போராடி வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஒரு அர்த்தம் கிடைக்கபெற வேண்டும். அதற்கான முழுமையான அழுத்தங்களை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நாம் கொடுப்போம்.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்களை மூடி மறைத்து பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு செல்லலாம் என அரசாங்கம் முயற்சிக்க கூடாது. நடைபெறவேண்டிய காரணிகள் சரியாக நடைபெற வேண்டும். சர்வதேசம் அதற்காக கூடிய அழுத்தத்தை கொடுத்து வருகின்றது.
தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில், நாட்டில். சர்வதேச ரீதியில் உண்மைகளை விளக்கும் நடவடிக்கையை நாம் மட்டுமே செய்து வருகின்றோம். வேறு எவரும் செய்யவில்லை. இந்த உண்மையினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
இடைக்கால அறிக்கையில் வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக பிரதான மூன்று விடயங்களை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த காரணிகளை நாம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வையே நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். வெறுமனே விமர்சனங்களை முன்வைப்பதில் அர்த்தம் இல்லை. ஆக்கபூர்வமாக நம் செயற்பட வேண்டும் என்றார்.