நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன 239 உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்றியுள்ளது.
தேர்தலில் பொதுஜன பெரமுனவானது மொத்தமாக 4941952 வாக்குகளை பெற்று அனைத்து உள்ளூராட்சிமன்றங்களிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன 3369 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
அதன்படி பொதுஜன பெரமுன 44.65 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் மொத்தமாக 3612259 வாக்குகளை பெற்று 42 உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்றியுள்ளதுடன் 2385 உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்டுள்ளது.
அதன்படி ஐக்கிய தேசிய கட்சியானது 32.63 வாக்கு களை பெற்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து மொத்தமாக 1481656 வாக்குகளை பெற்று 10 சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் 1032 உறுப்பினர்களை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 339675 வாக்குகளை பெற்று 38 சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் 407 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
கூட்டமைப்பு 3.07 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 693875 வாக்குகளை பெற்று 431 உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்டுள்ளது. 6.27 வீதமான வாக்குகளை ஜே.வி.பி. பெற்றுள்ளது.
இதனிடையே பிரதான கட்சி என்ற வகையில் சுதந்திரக் கட்சியே இந்தத் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பல சின்னங்களில் போட்டியிட்ட சுதந்திரக் கட்சியானது கிட்டத்தட்ட 15 வீத வாக்குகளை பெற்றுள்ளது.
அந்தவகையில் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் களமிறங்கிய சிறிலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதிக்கம் செலுத்துகின்றது.
தென்னிலங்கையின் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன பாரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
தென்னிலங்கையில் அதிகமான உள்ளூராட்சிமன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சி சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் தோல்வியை தழுவியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியானது வழமைபோன்று கொழும்பு மாநகர சபையில் அமோக வெற்றியீட்டியுள்ளது. எனினும் மொத்தமாக கொழும்பு மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது.
கண்டி மாத்தளை மாநக ர சபைகள் அம்பாந்தோட்டை நகர சபை வத்தளை பிரதேச சபை நுவரெலியா மாநகர சபை நாவலப்பிட்டி அக்குரணை போன்ற உள்ளூராட்சிமன்றங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பல உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களிலேயே வெற்றியீட்டியுள்ளதுடன் அதிக வாக்குகளையும் பெற்றுள்ளது.
வழமைப்போன்று வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகளை பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு 38 உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்றியுள்ளது.
உதாரணமாக யாழ். மாவட்டத்தில் யாழ். மாநகர சபை உள்ளிட்ட அதிகமான உள்ளூராட்சி சபைகளை இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ளது. சில சபைகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாவிடினும் சபைகளை வெற்றிக்கொண்டுள்ளது.
இம்முறை யாழ். மாவட்டத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.
அக்கட்சியானது யாழ். மாநகரசபையில் எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை உள்ளூராட்சிமன்றங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஈ.பி.டி.பி. கட்சியானது நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்றியுள்ளது.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட பல சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் சில உள்ளூராட்சிமன்றங்களையும் திருகோணமலை மாவட்டத்தின் பல உள்ளூராட்சிமன்றங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
மலையகம்
மலையகத்தை பொறுத்தவரை நுவரெலியா மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல சபைகளை கைப்பற்றியுள்ளது. அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட்டு மூன்று சபைகளை கைப்பற்றியுள்ளது. அத்துடன் பதுளை மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – சுதந்திரக் கட்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பல சின்னங்களில் இம்முறை போட்டியிட்டது. எப்படியிருப்பினும் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து 10 சபைகளை வெற்றிகொண்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஊடாகவும் சுதந்திரக் கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவும் சில பிரதேசங்களில் போட்டியிட்டது.
தென்னிலங்கையில் மிகவும் குறைவான உறுப்பினர்களைளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி பெற்றுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணி
இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எந்த உள்ளூராட்சிமன்றத்தையும் கைப்பற்றவில்லை. மாறாக குறிப்பிடத்தக்க அளவில் ஆசனங்களை பெற்றுள்ளது.
693875 வாக்குகளை மொத்தமஇாக பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியானது 431 உறுப்பினர்களை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெற்றதைவிட வாக்குகளைவிட அதிக வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.