ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கம் அப்படியே தொடரும். அதில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது.
ஆனால் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டாலும் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாள ரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன திட்டவட்டமாக அறிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பு உள்ளூராட்சி தேர்தலில் 45 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளது. அவருக்கு எதிரான எமது தரப்பு 55 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
எனவே நாங்களே இன்னும் முன்னணியில் இருக்கின்றோம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஆதரவை மஹிந்த தரப்பு இன்னும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிடுகையில்;
நல்லாட்சி தேசிய அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. இரண்டு பிரதான கட்சிகளையும் இணைத்து நல்லாட்சி தேசிய அரசாங்கம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதோ அவ்வாறே தொடர்ந்து பயணிக்கும்.
தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கத்திற்கு மக்களினால் சிவப்பு சமிக்ஞையே காட்டப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே நாங்கள் அந்த முடிவுகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
கேள்வி: அப்படியாயின் சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் தாங்கள் தனித்து அரசாங்கம் அமைப்பதாக கூறி வருகின்றனரே?
பதில்: அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை வேண்டுமே? பெரும்பான்மை பலம் இல்லாமல் எவ்வாறு ஆட்சி அமைப்பது. தற்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர்.
எனவே அவர்களுக்குத்தான் ஆட்சி அமைப்பதற்கான அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருந்தும் ஐக்கிய தேசியக்கட்சி சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தில் பயணிக்கவே விரும்புகிறது.
கேள்வி: அப்படியாயின் பிரதமர் பதவியில் மாற்றம் வராதா?
பதில்: பிரதமர் பதவியில் ஏன் மாற்றம் வரவேண்டும்? ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக நீடிப்பார். ஐக்கிய தேசிய முன்னணியில் அனைவரும் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கின்றனர்.
அதுமட்டுமன்றி தற்போது பிரதமரை மாற்றினால் புதிய பிரதமர் வந்து நிலைமைகள் சீரடைய ஆறுமாதங்கள் கடந்துவிடும். அது மேலும் பிரச்சினையைக் கொண்டுவரலாம். எனவே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது. மாறாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும்.
கேள்வி: அமைச்சரவையில் எப்போது மாற்றம் ஏற்படும்?
பதில்: அமைச்சரவையில் இவ்வாரம் மாற்றம் ஏற்படும்
கேள்வி: இவ்வாரத்திற்கு இன்னும் ஒருநாள் தானே உள்ளது ( இன்று வெள்ளிக்கிழமையை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கப்படுகின்றது)
பதில்: வெள்ளிக்கிழமையும் நடக்கலாம். மறுநாளும் நடக்கலாம்.
கேள்வி: அப்படியாயின் பிரதமர் பதவியில் சிக்கலே ஏற்படவில்லையா?
பதில்: பிரதமர் பதவியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை பிரதமரும் ஏற்றுக்கொள்கின்றார். கட்சியினரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அந்த பிரச்சினைக்கு பிரதமரை மாற்றுவது தீர்வல்ல. எனவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நீடிப்பார்.
கேள்வி: அப்படியானால் நாட்டின் அரசியலில் பரபரப்பாக என்னதான் நடக்கிறது?
பதில்: ஊடகங்களில்தான் நாங்களும் பார்க்கின்றோம். நீங்கள் கூறுவதுபோன்று மாபெரும் பிரச்சினை எதுவும் இல்லை. நெருக்கடி ஏற்பட்டது. அது பேசிதீர்க்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும். அதில் எந்த சிக்கலும் இல்லை.
கேள்வி: அமைச்சர் சாகல ரத்னாயக்க சட்டம் ஒழுங்கு அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதாக கூறினாரா?
பதில்: ஆம். அவர் கூறினார். அதாவது அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என்று கூறினார்.
கேள்வி: ஏன் அவ்வாறு கூறினார்?
பதில்: அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் அவர் அவ்வாறு கூறினார்.
கேள்வி: அப்படியானால் சட்டம் ஒழுங்கு அமைச்சு உங்களுக்கு கிடைக்கப் போகின்றதா?
பதில்: இல்லை என்னால் முடியாது. டாக்டர்களையும் பொலிஸ்காரர்களையும் ஒரே நேரத்தில் என்னால் சமாளிக்க முடியாது.
கேள்வி: ஐ.ம.சு.வின் செயலர் தனித்து ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரினாரே?
பதில்: அதற்கு பெரும்பான்மை வேண்டுமே, பெரும்பான்மையில்லாமல் எவ்வாறு ஆட்சி அமைப்பது இங்கு பரபரப்பாக கூறப்படுவதுபோன்று ஒன்றும் இல்லை.
நாளைமுதல் நல்லாட்சி அரசாங்கம் வழமைபோன்று இயங்கும். அதிகளவு பொய்யான தகவல்களே வெளிவருகின்றன. தொண்டமான் மஹிந்தவுடன் இணைந்து மலையகத்தில் ஆட்சி அமைக்கப் போவதாக கூறப்பட்டது.
ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவே இணங்கியிருக்கிறது. சி.வி. ரத்னாயக்கவுடன் சென்றபோது மாலை அணிவிக்கப்பட்டது என்பதற்காக அவர் மஹிந்தவுடன் இணைந்துவிட்டார் என்று அர்த்தமல்ல.
கேள்வி: இரண்டு கட்சிகளும் இணைந்து பயணித்தால் தொடர்ந்து சண்டைகளும் நெருக்கடிகளும் தொடருமே.
பதில்: இதன் பின்னர் திருந்தி நடப்பார்கள் என நம்புவோம்.
கேள்வி: பிரதமர் ராஜினாமா செய்யவேண்டுமென வலியுறுத்தப்படுகின்றதே?
பதில்: பிரதமர் ஏன் இராஜினாமா செய்யவேண்டும். 2015 ஆம் ஆண்டு எமக்கு கிடைத்த ஆணை அப்படியே இருக்கின்றது. இன்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 45 வீதமான வாக்குகளே கிடைத்துள்ளன.
ஆனால் எமது தரப்பிற்கு 55 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே நாம் தான் இன்னும் முன்னணியில் இருக்கின்றோம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான மக்கள் ஆதரவை இன்னும் பெறவில்லை.
கேள்வி: கரு ஜயசூரியவை பிரதமராக்க முயற்சிக்கப்பட்டதாமே?
பதில்: அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அவை எல்லாம் பொய்யான தகவல்கள்.