திருமணத்துக்கு கொடுத்த கிஃப்ட் பாக்ஸ் வெடித்ததில் புது மாப்பிளை பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பொலங்கிர் மாவட்டத்தில்தான் இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொலங்கிர் மாவட்டத்தில் பட்நாகரைச் சேர்ந்த சௌமியா ரஞ்சன் சாஹு. இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த ரீமா என்பவருக்கு கடந்த 18-ம் தேதி திருமணம் நடந்தது. பின்னர் 21-ம் தேதி இவர்களது ரிஷப்சன் நடைபெற்றது.
இந்தநிலையில் திருமணத்துக்கு வந்த கிஃப்ட் பார்சலை நேற்று பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது அதில் இருந்த ஒரு கிஃப்ட் பார்சல் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதில் மணமகனின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த சௌமியா ரஞ்சன் மற்றும் அவரின் மனைவி ரீமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனையிலேயே சௌமியா ரஞ்சன் உயிரிழந்தார். இதேபோல் ரீமாவின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் கூறுகையில், “பார்சலில் இருந்து ஜெலட்டின் போன்ற வெடிபொருள் வெடித்துள்ளது.
சமையலறைக்கு அருகில் வெடிவிபத்து நிகழ்ந்ததால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருமணத்துக்கு பரிசுப்பொருள்கள் கொடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
திருமணத்துக்கு கொடுத்த கிஃப்ட் பார்சல் வெடித்து புதுமாப்பிள்ளை உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.