வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழ் அரசுக் கட்சியினரே முன்னெடுத்தனர் என்று வடக்கு மாகாண சபையின் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தி ருப்பது வரவேற்கத்தக்கது.
அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருமே நடத்தினர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று எம்மீது குற்றம் சுமத்தியதுடன், சில தமிழ் ஊடகங்களும் அவ்வாறே செய்தியும் வெளியிட்டிருந்தன.
அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் இன்று உண்மை வெளியாகியுள்ளது. ஈ.பி.டி.பி. மீது அன்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது என்பது உறுதிசெய்யப்பட்டு அந்த அவதூறிலிருந்தும் ஈ.பி.டி.பியை வரலாறு விடுதலை செய்துள்ளது.
இவ்வாறு அந்தக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,திருமதி அனந்தி சசிதரன் வீட்டின் மீது மர்ம நபர்களால் மாகாணசபைத் தேர்தலுக்கு முதல் நாள் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரே மேற்கொண்டனர் என்று தமிழ் அரசுக் கட்சியினர் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர்.
அந்த அவதூறுச் செய்தியானது எமது வெற்றியையும் பாதிக்கச் செய்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் தற்போதைய அந்தக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி சுகாஸ் ஈ.பி.டி.பி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறுகளை பரப்பி வந்திருந்தார்.
2013ஆண்டுக்கான இலங்கை தொடர்பான அறிக்கையில் அந்தச் சம்பவத்தை ஈ.பி.டி.பியினரே செய்ததாகவும், அந்தத் தாக்குதல் நடைபெற்றபோது நேரடியாகக் கண்டதாகவும் சட்டத்தரணி சுகாஸ் கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி மாலையிலும், செப்ரெம்பர் 20ஆம் திகதி அதிகாலையிலும் மாகாணசபைத் தேர்தலுக்கு முதல்நாள் அடையாளம் காணப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஏனைய இராணுவச் சீருடை அணிந்திருந்த நபர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட திருமதி அனந்தி சசிதரனுடைய இல்லத்தைத் தாக்கினார்கள்.
தகவல்களின் படி, வன்முறையாளர்கள் வீட்டினுள் புகுந்து தனியுடமைகளை அழித்ததுடன், 8 நபர்களுக்கும் காயம் விளைவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரான சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ் என்பவர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தான் யார் என்பதை தன்னைத் தாக்குவதற்கு முன்னர் கூறியிருந்தார்.
இதன் ஊடாக ஈ.பி.டி.பி. மீது அன்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது என்பதை காலம் வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்று கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி. மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும், அவதூறுகளும் சுமத்தியவர்களின் பொய் முகங்கள் தற்போது அம்பலமாகி வருகின்றது.
உள்நோக்கத்துடனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், சம்பங்களை திசை திருப்பும் நோக்கத்துடனும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி பிழைப்பு நடத்தியவர்களின் கதைகளை பன்னாட்டு முகவர்களும் ஆராயமல் விழுங்கிக் கொண்டுள்ளார்கள் என்பதும் தெரியவருகின்றது.
எம்மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து உண்மையான குற்றவாளிகள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு உண்மை வெளிவருகின்ற நிலையில் ஈ.பி.டி.பியினராகிய நாம் நிரபராதிகள் என்பதையும், எம்மீது அவதூறுகள் வலிந்து சுமத்தப்பட்டுள்ளது என்பதை வரலாறு வெளிச்சத்துக்கு கொண்டுவந்து எம்மீதான களங்கத்தை துடைத்துள்ளது – என்றுள்ளது.