மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் – மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று (19) காலை அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கனவே திருமணமான இவர்கள் இருவரும் இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதில், நீலவண்ணன் லோகநாயகிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு குழந்தையும் தற்போதைய இரண்டாந்தாரத்தின் மூலம் 5 மாதக் கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில தடயப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அதேவேளை, நேற்று மாலை இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும், அயலவர்கள் சென்று இருவரையும் சமாதானம் செய்திருந்ததாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மட்டக்களப்பு குற்ற தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வவுணதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.