கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அளேநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசேகர் (வயது 27). வேன் டிரைவர்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாரதம்மா (22) என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சோமசேகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக சாரதம்மா கூறினார்.
ஆனால் சோமசேகரின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சோமசேகர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சோமசேகரின் மனைவி சாரதம்மாவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
கொலையுண்ட சோமசேகர் டிரைவராக வேலை பார்த்ததால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அந்த நேரம் சோமசேகரின் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த பேட்டராயன் என்பவர் அடிக்கடி சாரதம்மாவின் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது அவருக்கும், சாரதம்மாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் எல்லாம் கள்ளக்காதலன் பேட்டராயனை வீட்டிற்கு வரவழைத்து அவனுடன் சாரதம்மா உல்லாசமாக இருந்து வந்தார். இது குறித்து சோமசேகருக்கு தெரியவந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தனது மனைவியை கண்டித்து இந்த கள்ளத்தொடர்பை இத்துடன் விட்டுவிடு என்று கூறினார். ஆனாலும் தனது கள்ளக்காதலனுடன் தொடர்ந்து சாரதம்மா உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி இடையே இது தொடர்பாக பிரச்சினை அதிகமானது.
இதனால் தனது கணவர் உயிருடன் இருக்கும் வரை தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது என்று சாரதம்மா, தனது கள்ளக்காதலன் பேட்டராயனிடம் கூறினார். இதையடுத்து பேட்டராயன் சோமசேகரை தீர்த்து கட்ட திட்டமிட்டார். இதற்காக அவரது நண்பர் அப்பையா என்பவரின் உதவியை நாடினார்.
நேற்று முன்தினம் சோமசேகர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நைசாக வீட்டிற்குள் பேட்டராயன், அப்பையா ஆகியோர் நுழைந்தனர்.
அந்த நேரம் சாரதம்மா தான் வைத்திருந்த சுடிதார் துப்பட்டாவை தனது கள்ளக்காதலனுக்கு எடுத்து கொடுத்தார். அப்பையாவும், சாரதாவும் சோமசேகரின் கை,கால்களை பிடித்து கொண்டனர். சோமசேகரின் கழுத்தை துப்பட்டாவால் பேட்டராயன் இறுக்கினார்.
இதனால் மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் சோமசேகர் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து யாரும் கேட்டால் உனது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி விடு என்று சாரதம்மாவிடம் கூறி விட்டு பேட்டராயன் தனது நண்பர் அப்பையாவுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சோமசேகரின் அண்ணன் முனிராஜ் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாரதம்மாவை கைது செய்தனர். தப்பி ஓடிய பேட்டராயன், அவரது நண்பர் அப்பையா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
நேற்று இரவு அளேநத்தம் கிராமத்தில் மறைந்திருந்த பேட்டராயனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அப்பையாவை ஓசூர் அருகே உள்ள பத்திரபள்ளியில் தப்பி ஓடியபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பேட்டராயன், அவரது நண்பர் அப்பையா மற்றும் சாரதம்மா ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல் மோகத்தால், புதுமாப்பிள்ளையை அவரது மனைவியே கள்ளக்காதலன், அவரது நண்பர் உதவியுடன் கழுத்தை இறுக்கி கொன்ற சம்பவம் தேன்கனிக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.