பிறந்து 16 நாளே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு குரங்கு ஒன்று காட்டுக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ளது, தலபஸ்தா என்ற கிராமம். இங்கு குரங்குகள் தொல்லை அதிகம்.
அடிக்கடி ஊருக்குள் வந்து எதையாவது தூக்கிச் செல்லும் குரங்குகளை, கிராமத்தினர் விரட்டி அடிப்பது வழக்கம். இதன் காரணமாக சிலரை கடித்துக் குதறியிருக்கிறது குரங்குகள். இதுபற்றி வனத்துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா நாயக் என்பவர் மனைவிக்கு 16 நாட்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்துள்ளது. மகனை கொஞ்சி மகிழும் நாயக், நேற்றும் அப்படி கொஞ்சிவிட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அவர் மனைவி குழந்தையுடன் படுத்திருந்தார். பின்னர் எழுந்து முகம் கழுவச் சென்றார், மனைவி. அப்போது ஜாலியாக அங்கு வந்த குரங்கு, குழந்தையைப் பார்த்தது.
பிறகு என்ன நினைத்ததோ, அதை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடியது. இதைப் பார்த்த நாயக் மனைவி கூச்சல் போட்டார். ஆனால் குரங்கு பாய்ந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.
பின்னர் பதறிய குடும்பம், அக்கம் பக்கத்து வீட்டினருடன் சென்று வன அலுவலகத்தில் புகார் செய்தது. அவர்கள் மூன்று தனி டீமை அமைத்து குழந்தையை தேடி வருகின்றனர். இன்னும் தேடி வருவதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று நாயக் குடும்பத்தினர் வீட்டின் முன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.