ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகப் பணிபுரியும் 36 வயதான ராதிகா ரெட்டி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிபவர், ராதிகா ரெட்டி, இவரின் நேர்த்தியான செய்திவாசிப்பால் ஹைதராபாத் பகுதியில் மிகவும் பிரபலமானவர்.
இவர், கடந்த ஆறு வடங்களுக்கு முன்னர், கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தன் மகன் மற்றும் தந்தையுடன் வாழ்ந்துவருகிறார்.
இவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன். இவர்கள், ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகின்றனர்.
நேற்று இரவு, பணி முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்பிய ராதிகா, தான் வசிக்கும் கட்டடத்தின் ஐந்தாவது மாடிக்குச் சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ராதிகாவின் உடையில் இருந்து ஒரு கடிதத்தைக் கைப்பற்றியுள்ளனர். அதில், “எனது மூளையே எனக்கு எதிரி. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” எனத் தெலுங்கில் எழுதிவைத்துள்ளார்.
இவர், பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். ராதிகாவின் தற்கொலை தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.