ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து வெள்ளியை கைப்பற்றி உள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ள 16 வயதான மனு, ஹரியானவை சேர்ந்தவர் ஆவார்.
இதனையடுத்து, ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவை சேர்ந்த ரவிகுமார்.
தற்போது 6 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா, காமன்வெல்த் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இத்துடன் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, பெண்களுக்கான 69 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பூனம் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.
பெனாரசை சேர்ந்த பூனம், மொத்தம் 222 கிலோ எடையை தூக்கி இந்த பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
காமன்வெல்த்: தொடர்கிறது இந்தியாவின் தங்க வேட்டை, மகளிர் டேபிள் டென்னிஸில் தங்கம்
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்-இல் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.
சிங்கப்பூர் அணிக்கு எதிராக நடந்த இந்தப் போட்டியில், இன்று, ஞாயிறன்று இந்தியா வென்றுள்ளது. காலிறுதியில் மலேசியா மற்றும் அரையிறுதியில் இங்கிலாந்து ஆகிய நாட்டு அணிகளை இந்தியா வென்றது.
மௌமா தாஸ், மனிகா பத்ரா, சுதிர்த்தா முகர்ஜீ, பூஜா சகஸ்ரபுதே மற்றும் மதுரிகா பட்கர் ஆகியோரை உள்ளடக்கிய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி இந்தியா சார்பில் பங்கேற்றது.
இதுவரை இந்தியா வென்றுள்ள 12 பதக்கங்களில் ஏழு பதக்கங்கள் தங்கம் ஆகும்.
தற்போது ஏழு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.