Site icon ilakkiyainfo

மவுனப் போராட்டம் குறித்து கிண்டல்: கலந்து கொள்ளாதது ஏன்?- சிம்பு விளக்கம் -(வீடியோ)

மவுனப் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று நடிகர் சிம்பு பேட்டி அளித்தார்.

சென்னையில் நடிகர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மவுனப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நடிகர் சிம்பு கடுமையான விமர்சனம் வைத்தார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ நடிகர் சங்கம் சார்பில் மவுனப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. முதலில் தமிழ்நாட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடக்கிறது. நிறைய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. அதை நான் தவறு என்று கூறவில்லை.

ஏனென்றால் நல்ல விஷயம் நடக்கும்போது அதை ஆதரிக்க வேண்டும். ஒரு நடிகனாக என்னுடைய ஒத்துழைப்பை நான் கொடுத்துக்கொண்டுதான் வருகிறேன்.

ஆனால் ஜிஎஸ்டி வரி இப்போது நடக்கும் ஸ்டிரைக்கில் பல பிரச்சினைகள் உள்ளன. அதை அரசிடம் கொண்டு சென்று கூறி அதற்கு தீர்வு காணுவதற்கே நாம் திண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

இதில் ஸ்டெர்லைட், காவிரிக்கு ஒரு போராட்டம் நடத்தி அதில் ஆதரவு தருகிறோம் என்பது என்னவென்று எனக்கு புரியவில்லை.

மவுனப் போராட்டம் என்று காலையில் சொன்னார்கள். பேசாததால் தான் இப்போது பிரச்சினையே, பேசினால், தானே தீரும் பிரச்சினை. ஆகவே எனக்கு இதில் உடன்பாடில்லை. அப்படிக் கூறுவதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

அந்தப் போராட்டத்திற்கு என்னை அழைக்கவும் இல்லை. அதனால் நான் செல்லவில்லை.

ஜல்லிக்கட்டு நேரத்திலேயே நான் சொன்னேன். அதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒருவன் என்ன பேசுகிறான் என்று கேட்கும் நிலையில் இல்லை. இங்கு பிரச்சினையே நான் பேசுவதுதான். அதனால் தான் மவுனமாக இருங்கள் என்று கூறுகின்றனர்.

சிலர் உண்மையாக மக்களுக்காக குரல் கொடுக்கப் பேசுவார்கள், சிலர் இதனால் லாபம் கிடைக்கும் என்று பேசுவார்கள், ஒரு சிலர் அரசியலுக்காக பேசுவார்கள், ஒரு சிலர் அரசியலில் வரமுடியுமா என்று யோசித்துப் பேசுவார்கள், ஒரு சிலர் உண்மையாக மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று பேசுவார்கள்.

ஒரு சிலபேர் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பத்து பேர் முன்பு இருக்கிறோம் என்பதற்காக என்னென்னவோ பேசுவார்கள்.

யார் உண்மையில் மக்களுக்காகப் பேசுகிறார்கள், யார் நமக்காக பேசுகிறார்கள் என்பது அரசியல், சினிமா, பத்திரிகை ரீதியாத் தெரிவதில்லை.

10 பேர் போடுகிற கமெண்ட்ஸை வைத்து மக்களை திசை திருப்பிக்கொண்டு வருகிறார்கள்.

இதனால் தான் நான் சமூக வலைதளத்தை விட்டு வெளியே வந்தேன். முதலில் மக்கள் இந்த காமெடிகளை புரிந்துகொள்ளவேண்டும். யார் எதற்காக பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.”

இவ்வாறு சிம்பு விளக்கமளித்தார்.

சிம்பு செய்தியாளர் சந்திப்பு

Exit mobile version