விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் பூட்டை உடைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்திருக்கிறார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.
இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.
இவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.
இந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
வெளியே வர மறுத்த நிர்மலா தேவி
இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லூரியின் செயலர் காவல்துறையிடம் புகார் அளித்தது.
அதன் அடிப்படையில் காவல்துறை நிர்மலா தேவியின் மீது வழக்குகளைப் பதிவுசெய்திருப்பதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதி தெரிவித்தார்.
இதையடுத்து நிர்மலா தேவியின் வீட்டிற்கு நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சென்றபோது, அவர் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வெளியில் வர மறுத்தார். இதனால், அவரது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். கணவர் சரவண பாண்டியனும் சகோதரர் மாரியப்பனும் அங்கு வந்தவுடன் ஊடகத்தினரை அகற்றிவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலா தேவியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற வகையில் இந்த நடவடிக்கையை ஆளுனர் மேற்கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
நிர்மலா தேவி பேசும் ஒலிநாடாவில், ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை ஆளுநர் மாளிகை மேற்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் ஏற்கனவே தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், ஆளுநரின் சமீபத்திய நியமனங்களை விசாரிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.