சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம். ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்குச் சமமாக அமர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யாவுக்கு, 17 வயதுதான்.
முகம் ஒட்டிப்போன சல்லியான தேகம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். இந்தப் பழமொழிக்கு, சூர்யா சிறந்த உதாரணம். அண்ணாநகரில் இரவு நேரத்தில் நடந்த செயின் பறிப்புச் சம்பவத்தில் வில்லனைப் புரட்டி எடுத்த ஹீரோ இந்த சூர்யா.
அண்ணாநகர் சிந்தாமணி பகுதியில், டாக்டர் அமுதா என்பவர் க்ளீனிக் வைத்து நடத்திவருகிறார். க்ளீனிக் உள்ளே வந்த வடநாட்டு ஆசாமி, `தன் மனைவிக்கு கருப்பைப் பிரச்னை.
என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுப்பீங்க’ என்று டாக்டரிடம் கேட்டுள்ளார். பிறகு, தன் மனைவியை அழைத்துவருவதாகக் கூறிச் சென்றவர், 15 நிமிடம் கழித்து மீண்டும் க்ளீனிக் வந்துள்ளார்.
உள்ளே சென்றவர் திடீரென டாக்டரின் கழுத்தில் இருந்த 8 சவரன் அளவு மதிப்புடைய நகையைப் பறித்துக்கொண்டு சாலையில் பாய்ந்து ஓடினார். டாக்டர் கத்திக் கூப்பாடுபோட, அந்தச் சமயத்தில் அங்கே குப்பை கொட்டிக்கொண்டிருந்த சூர்யாவின் காதில் விழுந்தது.
ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்துகொண்ட சூர்யா, திருடனை விரட்டியபடியே ஓடியிருக்கிறார். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற சூர்யா, திருடனின் காலை தட்டி கீழே விழவைத்தார். திருடன் மீது பாய்ந்து தாக்கினார். மிரண்டுபோன திருடன், மயங்கினான்.
திருடனிடம் இருந்து செயினை மீட்ட சூர்யா, அதை டாக்டரிடம் கொடுத்தார். சூர்யாவின் துணிச்சலான செயல் மீடியாக்களில் வெளிவர, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சூர்யாவின் வீட்டுக்கே வாகனத்தை அனுப்பி தன் அலுவலகத்துக்கு வரழைத்தார். மீடியாக்களிடம் இன்று சூர்யாவை அறிமுகப்படுத்தியதுடன், ரொக்கப் பரிசு அளித்தும் பாராட்டினார்.
சினிமாவில்தான் சிறுவயது ரஜினி பெரிய வயது ரெளடிகளை அடித்து விரட்டுவார். இங்கே நிஜமாகவே சிறுவன் சூர்யா, 30 வயது நிரம்பிய ஆஜானுபாகுவான திருடனை விரட்டிப் பிடித்து விளாசித் தள்ளியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தில், நின்றால் தலை தட்டும் கீற்றுக் கொட்டகையில் பாட்டியுடன் சூர்யா வசிக்கிறார். நாம் போனபோது குடிசை முன்னால் சூர்யா அமர்ந்திருந்தார்.
குப்பத்து சிறுவர்களுக்கேயுடைய இயல்பான தைரியத்துடன் பேச ஆரம்பித்தார். “அண்ணே, எதையும் சமாளிக்க முடியும்கிற தைரியம் எனக்கு இருந்துச்சு.
டாக்டர் கத்தினதைக் கேட்டதும் நான் அவன் பின்னாடியே ஓடினேன். ஓடிட்டிருக்கும்போதே பின்னால இருந்து காலை இடறி கீழே விழவெச்சேன்.
கீழே விழுந்த இடத்துல செங்கல் இருந்துச்சு. அதை எடுத்து என் முகத்துல ஓங்கி அடிக்க திருடன் ட்ரை பண்ணான். நான் விலகிக்கிட்டேன். இல்லைன்னா என் மண்டை உடைஞ்சிருக்கும்.
அடுத்த நொடியே சுதாரிச்சுக்கிட்டு திருடன் முகத்துல ஓங்கிக் குத்தினேன். மூக்கு உடைஞ்சு குபுக்னு ரத்தம் கொட்டிச்சு. நான் அவனை அடிக்கும்போது எல்லோரும் வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க.
அந்த ஆளு உங்களை மாதிரி உயரமா இருந்தார். எனக்கு யாராவது உதவிக்கு வர மாட்டாங்களானு தோணுச்சு. அங்கே இருந்த மாற்றுத்திறனாளி ஒருத்தர்தான் உதவிக்கு வந்தார்.
நடுரோட்டுல ஒரு சின்னப் பையன் இவ்வளவு தூரம் போராடிட்டு இருக்கேன். என்ன ஏதுனுகூட யாரும் கேட்கலை. ஆனா, நான் அடிச்சதுலேயே திருடன் மயங்கிட்டான்.
திருடன் முகத்திலிருந்து ரத்தம் கொட்டியதைப் பார்க்கப் பரிதாபமாத்தான் இருந்துச்சு. பக்கத்துல இருந்த கடையில தண்ணி வாங்கிக் கொடுத்து மயக்கத்தைத் தெளியவெச்சேன்” என்கிறார் வெள்ளந்தியாக.
`கமிஷனர் என்ன சொன்னார்?” என்று கேட்டால், “எனக்கு அவங்கெல்லாம் யாருனே தெரியாது. காலையில வீட்டுக்கு வந்து வண்டியில கூட்டிட்டுப் போனாங்க. அப்பதான் `இவர்தான் போலீஸ்ல பெரிய ஆளு’னு சொன்னாங்க.
என்னைப் பார்த்ததும் தோள்ல தட்டிக்கொடுத்தார். `உன்னை மாதிரி ஒவ்வொருவரும் இருந்தா, இந்த நாட்டுல தப்பே நடக்காது’ என்றார். `படிக்கவைக்கிறேன் படிக்கிறாயா?’ என்றார்.
`எனக்கு படிக்கலாம் இஷ்டம் இல்லை சார்… நான் வேலை செஞ்சு பெரிய ஆளா வருவேன்னு’ சொன்னேன்” என்று கூறும் சூர்யாவுக்கு, தொழிலதிபராக வருவதுதான் ஆசையாம்.
சிறுவனின் பாட்டியோ “எய்யா… இவன் சின்னப் பையன்யா, இவனுக்கு என்னயா தெரியும்? இவனுக்கு ரெண்டு அக்காமார் இருக்காங்க. இவன் வேலைக்குப் போயி அவங்களைப் படிக்க வெச்சுட்டிருக்கான். திருடன் கத்தியால குத்தியிருந்தான்னா நான் என்ன செய்வேன்? ஊர் வம்பு நமக்கு எதுக்குயா…” என்று பதற்றம் கலந்த பயத்துடன் பேசினார்.
திருடனிடம் செயினைப் பறிகொடுத்த டாக்டர் அமுதா, “எங்க க்ளீனிக் எதிரே இருக்கிற கார் உதிரிபாகங்கள் கடையில்தான் சூர்யா வேலைபார்க்கிறான். எனது கூச்சல் கேட்டதுமே சூழலுக்கு ஏற்ற மாதிரி சூர்யா நடந்தது, எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்த மாதிரி பையன்கள்தான் நாட்டுக்குத் தேவை. போலீஸ் ஸ்டேஷன்ல ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சதும் இரவு 11:30 மணியளவில் நானே என் காரில் அவனை வீட்டில் கொண்டுபோய் விட்டேன்.
இந்தச் சம்பவம் என் மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இங்கே வருகிறார்கள். மெடிக்கல் ரெப் வருவார்கள்.
நடந்த சம்பவத்தின் அடிப்படையில் நான் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கவேண்டியுள்ளது. இருந்தாலும் சூர்யாவின் தைரியம் அலாதியானது. அவனை பாராட்டி நானும் 5,000 ரூபாய் கொடுத்தேன். இப்போது எங்கள் குடும்பத்தில் அவனும் ஒருவன் ” என்று நெகிழ்கிறார்.
அநீதி நடக்கும்போது பார்த்துக்கொண்டிருப்பதும் நாட்டின் தலையாய பிரச்னையே. சிறுவனாக இருந்தாலும் சூர்யா, திருடனை விரட்டிச் சென்று பிடித்தது நிச்சயம் பாராட்டுக்குரியது. சூர்யா குறித்து செய்திகள் வெளியானதும், உடனடியாக அவரை அழைத்துப் பாராட்டிய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் பாராட்டுக்குரியவர்.