யாழ். தென்மராட்சி ஏ 35 வீதியின் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் கவலைக்கிடமான நிலையிலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கட்டப்பிராயைச் சேர்ந்த விஜயரத்தினம் பிரசாத் (23 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதோடு, குணராசன் திருக்குமரன் (27 வயது) என்ற இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகத்துடன் மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்த வேளையில், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.