– இருவரையும் பதவி நீக்க ஜனாதிபதி உத்தரவு
– எவ்வித தடையுமின்றி விசாரிக்கவும் பணிப்பு
ரூபா 2 கோடி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து, இலஞ்சத் தொகையை பெற்றுக்கொள்ளும்போது குறித்த இருவரும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுவனமொன்று தொடர்பிலான பண பரிமாற்றம் தொடர்பில் ரூபா 10 கோடி பணத்தை இலஞ்சமாக கோரி, அதில் ரூபா 2 கோடி பணத்தை முற்பணமாக பெறுவதற்கு முயற்சி செய்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் ஐ.எச்.கே. மஹானாம, காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பதோடு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி எனும் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த இருவரினதும் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர்.
ஊழல் மோசடிக்கு எதிரான அரசாங்கத்தின் தீர்க்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இதனூடாக உறுதியாவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.