இலங்கையில் தமிழர்களின் பகுதியாக உள்ள வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் தான் சி.வி.விக்னேஸ்வரன். 25 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி விட்டு அரசியலுக்குள் நுழைந்து 2013 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானவர். 79 வயதாகும் விக்னேஸ்வரன் கடந்த வாரம் குற்றாலம் வந்திருந்தார்.
குற்றாலத்தில் டாக்டர் சீனிவாசனின் குறும்பலா மூலிகை ஆய்வு மையத்தில் நடைபெற்ற சித்திரை விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இலங்கையில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் பேசிய போது அவர் அளித்த பேட்டி:
கடந்த தேர்தலில் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முன்னிறுத்தப் போவதாக சுமந்திரன் எம்.பி. கூறியிருக்கிறாரே?
கடந்த தேர்தலில் ஐந்து கட்சிகள் இணைந்து என்னை முதல்வராக்கின. இப்போது அந்த ஐந்து கட்சிகளும் ஒன்றாக இல்லை. கடற்குளியல் முடிந்தவுடன் கரையேற வேண்டும் என நினைப்பவன் நான். ஆனால் உடனிருப்பவர்களோ என்னைக் கரையேற விடுவதாக இல்லை!
தமிழ் மக்கள் பேரவை மூலம் தனித்துக் களமிறங்குவீர்களா?
அந்தப் பேரவை அரசியலில் ஈடுபடாத மக்கள் இயக்கம். சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக எமது மக்களைப் பலப்படுத்துவதே அதன் குறிக்கோள். தேர்தலில் நான் போட்டியிடுவதென்றால் வேறு வழிகளையே நாட வேண்டும். அது பற்றி என் நண்பர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்!
பிரதமர் ரணிலின் ஆதரவாளரான மாவை சேனாதிராஜாவால் உங்களைப்போல் சுயமாகச் செயற்பட முடியுமா?
வடக்கில் யார் முதல்வராக வந்தாலும் மத்திய அரசை அனுசரித்தே போக வேண்டும். எல்லா அதிகாரங்களும் இலங்கை மத்திய அரசிடம் தான் உள்ளது.
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்பது முழுமையான சுயாட்சிக்கு வழி வகுக்காது. மாவை சேனாதிராஜா மத்திய அரசுக்கு வேண்டியவர் என்றால் சமூக பொருளாதார பலத்தை மத்திய அரசிடமிருந்து பெற வாய்ப்பு உண்டு.
ஆனால் ஆலைகளையும் சாலைகளையும் நிர்மாணிப்பதுடன் எமது ஆணி வேரான உரிமைகளை கைவிடாதிருக்க வேண்டும் என்பதை அவர் உணர வேண்டும்!
இலங்கையில் பிளவுபட்டுள்ள தமிழ்த் தலைவர்களை ஒருங்கிணைத்து அறவழி பிரபாகரனாக மாறுவீர்களா?
எல்லாத் தலைவர்களும் ஒரு குடையின் கீழ் நின்று மக்கள் சேவை செய்ய முன்வர வேண்டும் என்பதே என் விருப்பம். தமிழர் கட்சிகள் மக்கள் இயக்கங்கள் என யாவரும் ஒன்று சேர்ந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூடாரமாக இருந்தது. ஆனால் தலைமைத்துவங்களின் தவறான போக்கினால் கூட்டமைப்பு சின்னா பின்னப்படுத்தப்பட்டு விட்டது.
மீண்டும் மக்கள் ஒன்று சேருவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் நோக்கும், பாங்கும், பக்குவமும் மாற வேண்டும். இல்லையேல் வேறு கூட்டமைப்பு உருவாதல் அவசியம். அதற்கு யார் தலைமை என்பதை மக்கள் முடிவு செய்யலாம்!
தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் தொடர்கிறதா?
நிச்சயமாக, அண்மையில் கூட 4000 க்கும் அதிகமான சிங்கள மக்களை தெற்கிலிருந்து கொண்டுவந்து குடியேற்றியிருக்கிறார்கள். அதனை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மகாவலி அதிகார மையம் என்கிற நிறுவனமே செயற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்திய -இலங்கை ஒப்பந்தம் போடுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்கத்தால் மகாவலி சட்டம் கொண்டு வரப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் படி 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இலங்கை முழுக்க வியாபித்திருக்கும் மேற்படி நிறுவனத்தின் அதிகாரங்கள் கத்திரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. எனவே தான் அந்தச் சபை இன்றும் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு வருகிறது.
அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கில்லை. இது பற்றி இலங்கை அரசிடம் முறையிட்டிருக்கிறோம். வடக்கு மாகாணத்திற்குச் சுயாட்சி வழங்கப்பட்டால் இவ்வாறான சிங்களக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்!
இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிராகச் சீனா பக்கம் சாய்வதாகச் சொல்லப்படுகிறதே?
இலங்கை அரசு சீனாவிடம் பெரிய அளவில் கடன்பட்டு வருகின்றது. உதவி கேட்கும் நாடுகளைச் சீனா அரவணைத்து வெளியுறவுக் காரியங்களைக் கச்சிதமாக முடித்து வருகிறது. கடன்பட்டோர் கொடுத்தவரைச் சாயாது இருக்க முடியாது!
தற்போது ஈழத் தமிழர்கள் தமிழக அரசியல் தலைவர்களிடம் எந்த மாதிரியான ஆதரவைப் எதிர்பார்க்கிறீர்கள்?
தனி நாடு, தமிழ் ஈழம் என்று உங்களுக்குள் சிலர் இங்கிருந்து கோருவது எம்மைத் தொடர்ந்து கட்டுப்படுத்துதலில் வைத்திருக்க எமது அரசாங்கத்திற்கு உதவுகிறது. சதா காலமும் தனி நாடு பற்றி நீங்கள் பேசும் போது வடக்கு மாகாண மக்களும் தென் இலங்கை மக்களும் கலவரம் அடைகிறார்கள்.
தென்னிந்திய தமிழர்கள் பாரதத்திலிருந்து பிரிந்து வட இலங்கையுடன் சேர்ந்து தமிழர்களுக்கென தனிநாடு ஒன்றை உருவாக்க பார்க்கிறார்கள் என்று கலவரம் அடைகிறார்கள். தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவளிப்பது எமது நாட்டு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
எனவே இங்குள்ள தமிழ் தலைவர்கள் பொருளாதார விருத்திகளை வட–கிழக்கிற்கு கொண்டுவர எத்தனிக்க வேண்டும். புலம்பெயர்ந்த அகதிகளின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஆவன செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த எம் மக்களுக்கு இந்தியா இரட்டை பிரஜா உரிமை வழங்கினால் தற்போதைய இரண்டும் கெட்டான் நிலை மாறி விடும்.
எமக்கு ஏற்படும் துன்ப துயரங்களுக்கு நீங்கள் இங்கிருந்தே குரல் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனிநாடு, தமிழ் ஈழம் என்று நீங்கள் கர்ஜிப்பது எமக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்தும்!
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?
வடக்கு–கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனி அலகு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்பேசும் இந்த இரண்டு அலகுகளுக்கும் சுயாட்சி உரிமை தரப்பட வேண்டும். இதை சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் யாப்பின் கீழேயே நடைமுறைப்படுத்த முடியும்.
இரா. சம்பந்தன் போன்றோர் சொல்லும் இணக்க வழி அரசியலினால் அதிகாரம் பெற முடியுமா?
இரு சமநிலை வகிப்பவர்களிடம் தான் இணைந்த அரசியல் சாத்தியமாகும். கிணற்றுக்குள் விழுந்தவன் தரையில் நிற்பவருடன் இணக்க அரசியல் நடத்தினால் அது வீழ்ந்திருப்பவனின் ஈனத்தனத்தை வெளிப்படுத்தும். முதலில் நாங்கள் சமநிலையில் நிற்க வேண்டும்.
அதன் பின்னரே இணக்க அரசியலில் ஈடுபட வேண்டும். இல்லையேல் பெரும்பான்மை மக்கள் எங்களை விலைக்கு வாங்கி விடுவார்கள். ஆலைகளையும் சாலைகளையும் தந்து எம்மை பேசா மடந்தைகளாக்கி விடுவார்கள்!
நீங்கள் முதல்வராக பதவியேற்று 5 ஆண்டுகள் முடிகிறது. உங்களால் தமிழர்களுக்குத் தன்னுரிமை பெற முடிந்ததா?
அதிகாரமில்லா பதவியில் இதுவரை ஆரோகணித்திருந்ததே பெரிய விடயம். அதை வைத்து தன்னுரிமை பெற்று விட்டீர்களா என்று கேட்டால்? தன்னுரிமைக்காக தானே முழு தமிழினமும் இன்னும் போராடி வருகிறது.
இலங்கை அரசாங்கம் தமிழ் இளைஞர்களை சீ்ரழிக்க திட்டமிட்டே போதைப்பொருட்களை தமிழர் பகுதிக்குள் கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
அது உண்மை தான். 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு (விடுதலைப்புலிகள் காலம்) வடமாகாணத்தில் எந்தவிதமான போதைப்பொருட்களும் பாவிக்கப்படவில்லை. போருக்கு பின்னர் தான் அவை கடத்தி வரப்படுகின்றன. இத்தனைக்கும் தமிழர் பகுதியில் ஒன்றரை லட்சம் சிங்கள இராணுவத்தினர் இருக்கிறார்கள்.
பொலிஸ் நிலையங்களிலும் பெரும்பான்மையினர் சிங்கள அலுவலர்களே இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது போதைப்பொருட்கள் தாராளமாக கடத்தி வரப்படுகின்றன என்றால், எங்கேயோ இருந்து யாரோ திட்டமிட்டு கொண்டு வருகிறார்கள் என்று தானே யூகிக்க முடிகிறது என்று கூறினார் விக்னேஸ்வரன். மேற்படி பேட்டி சென்னையிலிருந்து வெளிவரும் பிரபல வார சஞ்சிகையொன்றின் மறுபிரசுரமாகும்.