கடந்தவாரம் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, எதிர்பார்ப்புக்குரியதாக இருந்த சில விடயங்களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குரிய பதவியும் ஒன்றாகும்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பதவிக்குப் பதிலாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து, சாகல ரத்நாயக்க விலகிய பின்னர், அந்தப் பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பதை விட, அவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தம் என்றே பலரும் கருதியிருந்தனர்.
சரத் பொன்சேகாவுக்கும் கூட அந்தப் பதவியின் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. ஆனாலும், அந்தப் பதவி திலக் மாரப்பனவிடம் கொடுக்கப்பட்டது.
பின்னர், அதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துக்கொண்டார். கண்டி கலவரத்துக்குப் பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சு, யாரும் எதிர்பாராத வகையில் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கொடுக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு அமைச்சு இவ்வாறு கைமாற்றப்பட்டுக் கொண்டிருந்த போது, சரத் பொன்சேகாவும் சரி, அவரை அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களும் சரி- கடுமையாக ஏமாற்றமடைந்தனர்.
ரஞ்சித் மத்தும பண்டாரவும் கூட தனக்கு இந்தப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால், கடந்த வாரம் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, அது மற்றொருவரின் கைக்கு மாறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்பட்டது.
பெரும்பாலும் சரத் பொன்சேகாவுக்கே அந்தப் பதவி வழங்கப்படும் என்றே நம்பப்பட்டது. ஆனால் கடைசியில் அவருக்கு, ஏற்கனவே வகித்து வந்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சுடன், வன ஜீவராசிகள் அமைச்சே கூடுதலாக வழங்கப்பட்டது.
ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டபோது. சரத் பொன்சேகாவின் முகம் இறுக்கமாகவே காணப்பட்டது. அதுவே அவரது ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
எனினும், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக் குறித்து திருப்தியடைவதாக கூறியிருந்தார். எவ்வாறாயினும், சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட வன ஜீவராசிகள் அமைச்சை வைத்து, மஹிந்த ராஜபக் ஷவும், நாமல் ராஜபக் ஷவும் கிண்டல் அடித்திருந்தார்கள்.
சரத் பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படக் கூடாது என்பதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களுக்கு மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிலரும் உறுதியாக இருந்தனர்.
சரத் பொன்சேகா சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டால், முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக பொதுவான ஒரு நம்பிக்கை உள்ளது.
சரத் பொன்சேகாவும் கூட, தாம் சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டால், விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து. ராஜபக் ஷவினரை கூண்டில் ஏற்றுவேன் என்று கூறியிருந்தார்.
இப்போது சரத் பொன்சேகா சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்படுவதில் உள்ள பிரச்சினையும் இது தான். அரசாங்கத்துக்குள்- இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மாத்திரமன்றி ஐ.தே.கவினர் சிலரும் கூட, ராஜபக் ஷவினரைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
சரத் பொன்சேகா ராஜபக் ஷவினரால் அடிபட்டவர். அவர்களால் எல்லா மரியாதைகளையும் இழந்து சிறைக்கைதியாக அடைக்கப்பட்டவர். அதனால், அவருக்குள் இன்னமும் பழிவாங்கும் வெறி இருந்து கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமித்தால் அவர்களை விடாமல் துரத்துவார் என்ற பயம், ராஜபக் ஷவினருக்கு மாத்திரமன்றி, அரசாங்கத்தில் இருக்கின்ற பலருக்கும் கூட உள்ளது.
இது தான், அவருக்கு இந்தப் பதவி இன்னமும் எட்டாக்கனியாக இருப்பதற்கு முக்கிய காரணம்.
சரத் பொன்சேகாவுக்கு, ஐ.தே.க. உரிய கௌரவத்தை வழங்கவில்லை என்ற குறைபாடும் அவரது அனுதாபிகள் பலரிடம் உள்ளது. உண்மையில், இராணுவப் பின்னணியில் இருந்து வந்தவர்களால் ஐ.தே.கவில் பெரும் வளர்ச்சி காண முடியவில்லை.
சந்திரிகா ஆட்சிக்காலத்திலும் சரி, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்திலும் சரி, இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இவர் ஐ.தே.க. அனுதாபி, இவர் சுதந்திரக் கட்சி ஆதரவாளர் என்று அடையாளப்படுத்தப்படும் போக்கு காணப்பட்டது.
மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சுசில் சந்திரபால, ஜெனரல் சரத் பொன்சேகா போன்றவர்கள் பதவியில் இருந்த காலத்திலேயே ஐ.தே.க. அனுதாபிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள்.
இதனால் இவர்களால் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதி பதவியை அடைய முடியாத நிலை காணப்பட்டது.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். கிழக்கில் புலிகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்த அவர், அதிகாரத்துக்கு வருவதை புலிகளும் விரும்பவில்லை.
1999ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை வத்தளையில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத்தாக்குதலில் மேஜர் ஜெனரல் லக்கி அல்கமவும் கொல்லப்பட்டார்.
அதுபோலவே, இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு அப்பால் நகர முடியாமல் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு ஐ.தே.கவினால் களமிறக்கப்பட்டார். அவரால், முதலமைச்சர் பதவியைப் பிடிக்க முடியாத அதேவேளை, குண்டுத்தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டார்.
சரத் பொன்சேகாவுக்கும் கூட இராணுவத் தளபதி பதவி மறுக்கப்பட்டு, ஓய்வுபெறவிருந்த நிலையில் தான், மஹிந்த ராஜபக் ஷ போரை வெல்வதற்காக அவரை இராணுவத் தளபதியாக நியமித்திருந்தார்.
போர் முடிந்ததும், மஹிந்த அரசு அவரை ஒதுக்க முனைந்தது. அப்போது, அவர் மஹிந்தவை விட்டு விலகி, பொதுவேட்பாளராக களமிறங்கினார்.
அதன் விளைவாக, அவர் ராஜபக் ஷவினரைப் பகைத்துக் கொள்வதற்கும், சிறைவாசத்தை அனுபவிக்கவும் நேரிட்டது. தனிக்கட்சி தொடங்கினார். அதுவும் தோல்வியில் முடிய, கடைசியில் ஐ.தே.கவில் இணைந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினராக நியமித்த ஐ.தே.க. அவரை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , அந்தப் பதவி மாத்திரமன்றி, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியைக் கூட ஐ.தே.கவினால் அவருக்குக் கொடுக்க முடியவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியில் உயர்பதவி ஒன்று சரத் பொன்சேகாவுக்குக் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது, ஆனால் அண்மைய கட்சி மறுசீரமைப்புகளின் போது கூட சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவிகள் ஏதும் கொடுக்கப்படவில்லை.
பொதுவாகவே, சரத் பொன்சேகா போன்ற பரவலாக அறியப்பட்ட –மரபுசாரா அரசியல்வாதிகளை கட்சிக்குள்ளேயும், அரசாங்கத்துக்குள்ளேயும், முன்னிலைப்படுத்தப்படுவதை மரபுசார் அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.
மரபுசாரா அரசியல்வாதிகள் சில விடயங்களை துணிச்சலுடன் முடிக்கின்ற ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். பின்விளைவுகளைப் பற்றியோ, தமது அரசியல் எதிர்காலம் பற்றியோ அவர்கள் அதிகம் சிந்திக்கமாட்டார்கள்.
சரத் பொன்சேகாவும் அத்தகைய ஒருவர் தான். அதுதான், அவரால் அரசாங்கத்துக்குள்ளேயும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயும், பெரிய பதவிகளை எட்ட முடியாமல் உள்ளதற்குக் காரணம்.
இந்தப் பிரச்சினை சரத் பொன்சேகாவுக்கு மட்டும் உள்ளதல்ல. கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் கூட இதே பிரச்சினை உள்ளது.
அவர் ஒரு மரபுசாரா அரசியல்வாதியாக – அரசியலில் களமிறங்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார். அதற்கான சமிக்ஞைகளையும் இப்போது வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.
இருந்தாலும், கூட்டு எதிரணிக்குள் அல்லது பொதுஜன முன்னணிக்குள் இருக்கும் மரபுசார் அரசியல்வாதிகள் அவரை, அவரது வளர்ச்சியை அச்சத்துடன் பார்க்கிறார்கள். அது அவரது அரசியல் எதிர்காலத்துக்கும் கூட சிக்கலாக உள்ளது.
இராணுவத்தில் இருந்த போது நட்சத்திர நிலை தளபதிகளாக சோபித்தவர்களால் அரசியலில் பிரகாசிக்கின்ற நிலை இதுவரை உருவாகவில்லை. அதற்கு இந்தச் சிக்கலும் ஒரு காரணம்.
இந்தச் சிக்கலை உடைத்துக்கொண்டு வெளியே வர முடியாமல் சரத் பொன்சேகா திணறிக் கொண்டிருக்கும் நிலையில், கோத்தாபய ராஜபக் ஷ மாத்திரம் விதிவிலக்கானவராக இருந்து விட முடியுமா ?