காலியில் மர்மநபர்கள் இருவர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது நுழைவாயிலில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நேற்று அதிகாலை எரிபொருள் நிலை ஊழியர்களை துப்பாக்கி மூலம் மிரட்டியுள்ளனர். இதன்போது 38000 ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு தாண்டிய வேளையில் முகத்தை மூடிக்கொண்டு இலக்க தகடு அற்ற மோட்டார் சைக்களில் வந்த கொள்ளையாளர்கள் இருவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எரிபொருள் நிலையத்தில் 3 ஊழியர்கள் இருந்துள்ள நிலையில் கொள்ளைக்காரர்கள் துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கியை கொள்ளைக்காரர் இயக்க முயற்சித்துள்ளார். இதன் போது இரண்டு தோட்டாக்கள் வெளியாகியுள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு தோட்டக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொள்ளையடித்தவர்கள் பின்னதுவ பிரதேசத்தில் தப்பி சென்றுள்ள நிலையில், அங்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள வந்த வேன் ஒன்று கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளை துரத்தி சென்ற போதிலும் அவர்களை பிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிபொருள் நிலையத்தில் கடந்த 8 மாதங்களுக்குள் இரண்டு முறை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியும் 60000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.