மட்டக்களப்பு – காரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில்கொண்டுவந்து வீசப்பட்ட அந்த வயோதிபர் யார்? என்பது இன்னும் இனங்காணப்படாத நிலையில் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
இன்று(10) வியாழக்கிழமை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் வைத்தியசாலைக்குச்சென்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் பற்றியும் யாராவது தேடி வந்தனரா என்பது தொடர்பாகவும் வைத்தியரிடம் வினாவினார்.
இன்னும் சுயநினைவின்றி பிதற்றியநிலையிலிருப்பதால் அவரை மேலதிக சிகிச்சைக்காக உயர்வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வயோதிபர் தூக்கிவீசப்பட்ட சம்பவம் நேற்று (09) புதன்கிழமை 1.40மணியளவில் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
அவர் வாயைத்திறந்து கதைப்பதாயில்லை. ஆனால் ஒரேயொரு வார்த்தையை மட்டும் உதிர்க்கிறார். : ‘சாப்பாடு’ ‘சாப்பாடு ‘ என்று மட்டும் வருகிறது. வேறொரு வார்த்தையும் கதைக்கிறாரில்லை.
இந்தப்படத்திலுள்ள வயோதிபரை இனங்காண உதவுமாறு கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் காரைதீவு வைத்தியசாலைக்கு வந்து இனங்காட்டமுடியுமெனக் கூறப்பட்டுள்ளது.
கலியுக காலத்தில் இவ்வாறான அசாதாரண சம்பவங்களைக் கேட்க பார்க்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதென பலரும் முணுமுணுத்ததைக் கேட்கமுடிந்தது.