முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள இவ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில் கலந்தமை அருவருக்கத்தக்க காரியம்.
அத்துடன் 20ஆம் திகதியாகிய இக்காலைவரை அம்மதுபானப் போத்தல்களை அகற்றப்படாமலும், தங்கிய இடத்தைச் சுத்தமாக்கலும் உள்ளமை அப்பகுதியில் இதனைக் காணும் தமிழுறவுகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரம், சூழல் பாதுகாப்பில் உதாரணத்துவமாக நடக்கவேண்டியோர் கழிவுகளை எவ்விதம் இடுவது எனும் நடைமுறையற்று இருந்தமை வேதனை என ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
இக்கேவலமான செய்கைக்கும், புனிதப் பிரதேசமாக வருங்காலத்தில் மாறப்போகும் இவ்விடத்தின் தன்மை புரியாமல் மதுவருந்திவிட்டு தம்மை எழுச்சியின் முன்னோடிகளாக காட்சிப்படுத்த முற்பட்டமைக்கும் ஒட்டுமொத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் பொறுப்பல்ல.
ஏனெனில் இறுதிப்போர்வரை துன்பங்களைச் சுமந்தோரும், அக்குடும்பங்களைச் சேர்ந்தோரும், மாவீரர், போராளிகளின் உறவினர்களும், களங்கமற்று தாயகத்தை நேசிப்போரும் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக உள்ளனர்.
இங்கே காணவேண்டியது 17ஆம் திகதி மாலை நினைவேந்தல் தளத்திற்கு வந்துவிட்டு இரவு இவ்விடத்தில் தங்கியதோடு, அருகேயுள்ள மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடத்தைக் குறித்தும் முரணான கருத்துக்களை வெளிப்படுத்தி, அதே குடிநிலையில் மறுநாளான 18ஆம் திகதி எழுச்சியின் காட்சிகளாக தம்மைக் காட்ட முற்பட்ட குறிப்பிட்டளவு மாணவர்களே புனிதம் கெடப்பண்ணிய இச்செயலின் பொறுப்பாளிகள்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புகொள்ள வேண்டியுள்ளது. எதிரிகளிடம் இருந்தல்ல உள்ளேயே இருப்பவர்களிடமிருந்து.
சிலவருட கற்கை முடிந்ததும் அவர்கள் வேலைவாய்ப்புத் தேடுதலில் இறங்கிவிடுவர். ஆனால் பல்கலைக்கழகம் நிலையானது. அது தொடர்ந்து இயங்க வேண்டும்.