யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் ஆங்கில மொழியில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியரை அப்பாடசாலையில் கல்வி கற்கும் 7 சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
39 வயதான கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ப்ட்டு நேற்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த 7 சிறுமியர்கள் பல தடைவைகள் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் யாரிடமும் கூறக்கூடாது என ஆசிரியர் அச்சுறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க்கப்பட்டுள்ள சிறுமிகள் 12 வயதினை உடையவர்களாவர். அவர்களில் 6 பேரின் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ள பொலிஸார் தற்போது உறவினர் வீடொன்றுக்கு சென்றுள்ள சிறுமி ஒருவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆசிரியரின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு சிறுமி முதலில் இந்த விடயம் தொடர்பில் தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்தே சம்பவம் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் ஊடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை நேரம் முடிந்ததும் இந்த ஆசிரியர் மேலதிக வகுப்புக்களை எடுப்பதாக கூறி இந்த துஷ்பிரயோகங்களை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.