தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற ஒரு உள்ளக அரசியல் – இராணுவ புரட்சி அனுபவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் அடங்கிய கட்டுரையிது……
2004ம் ஆண்டு மார்ச் 3 முதல் ஏப்ரல் 11 வரையான ஆறு வாரங்கள் இடம் பெற்ற அந்த கிளர்ச்சி புலிகளின் உயர்மட்டத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையிலுள்ள பிரதான பகுதி எல்.ரீ.ரீ.ஈ யினரால் இராணுவ வழி முறைகளுடாக இரக்கம் காட்டாது அடக்கி ஒடுக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான கிழக்குப் புகுதி எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அந்த உட்பூசலால் ஏற்பட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டது எல்.ரீ.ரீ.ஈ யை கணிசமான அளவு வலுவிழக்கச் செய்தது.
கருணாவே பாதுகாப்புத் தேடி தென்பகுதியான சிங்களப் பகுதிக்கு தப்பி ஓடினார். கருணாவின் சொந்த சகோதரர் உட்பட அநேகமான அவரது விசுவாசமான அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலிகளினால் வேட்டையாடப் பட்டார்கள்.
கருணாவுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான அழிப்பு நடவடிக்கையை இறுமாப்புள்ள புலிகள் தொடர்ந்து நடத்தியது, ஸ்ரீலங்கா அரசதரப்பு பாதுகாப்பு இயந்திரங்களிடம் பாதுகாப்பு தேடுவதைத் தவிர கருணாவுக்கு வேறு தெரிவை விட்டு வைக்கவில்லை.
இதனால் போர் விரிவடைந்ததை தொடர்ந்து, கருணா மற்றும் அவரால் வழி நடத்தப்பட்ட கிழக்குப் பிரிவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (ரி.எம்.வி.பி) என்பன பிரதான பகுதி எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக்கொண்டு பல வழிகளிலும் சாதகமான பங்களிப்பினை அரசாங்கத்துக்கு நல்குவதற்கு வழி ஏற்பட்டது.
நாளடைவில் நிலமை எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக வேகமாக மாறத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ நிலைகொண்டிருந்த பகுதிகளில் இருந்து அது விரட்டியடிக்கப் பட்டது. கிழக்குப் பகுதியில் இருந்து புலிகளை சுத்தம் செய்தபின்னர் அங்கு 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன.
விதியின் விசித்திரமான சுழற்சியினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (யு.பி.எப்.ஏ) ஒரு பகுதியாக ரி.எம்.வி.பி போட்டியிட்டது,அதன் தலைமை வேட்பாளரான கருணாவின் முன்னாள் பிரதித் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மகாணத்தின் முதல் முதலமைச்சராகத் தெரிவானார்.
கிழக்கு முற்றாகத் திரும்பக் கைப்பற்றப்பட்டு தேசிய அரசியல் அங்கத்தில் மீள ஒருங்கிணைக்கப் பட்டதும், ஆயுதப் படையினர் வடக்கில் முன்னேறத் தொடங்கினார்கள் அதேசமயம் எல்.ரீ.ரீ.ஈ பின்வாங்கத் தொடங்கியது.
இறுதியில் புலிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் காரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் வளைத்துக் கொள்ளப்பட்டனர். கடைசியில் எல்.ரீ.ரீ.ஈயினர் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் முற்றாகத் தோற்கடிக்கப் பட்டனர்.
நந்திக் கடலேரிக் கரையில் வைத்து பிரபாகரன் கொல்லப்பட்டார். அந்த இடத்துக்கு தனது முன்னாள் தலைவரின் உடலை அடையாளம் காட்டுவதற்காக கருணா அழைத்து வரப்பட்டார்.
கசப்பான ஒரு முரண்பாட்டின் எடுத்துக்காட்டாக உயிரற்ற பிரபாகரன் உடலை கருணா வருத்தத்துடன் வெறித்துப் பார்ப்பதை அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கhண்பித்தன.
ராஜபக்ஸ அசாங்கத்தில் கருணா ஒரு பிரதி அமைச்சராகவும், அத்தோடு அவர் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவும் இருந்தார். இதுதான் எல்.ரீ.ரீ.ஈ உடன் அவர் விரோதித்துக் கொண்டதுக்கும் மற்றும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்ததுக்கும் அவருக்கு கிடைத்த நன்மைகள்.
கருணாவின் தலைமையில் கிழக்கில் உதயமான கிளர்ச்சி எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான நீண்ட போராட்டத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.
உண்மையான சண்டையில் கருணா தோற்றிருந்தாலும்கூட அதைத் தொடர்ந்து உருவான முன்னேற்றங்கள் அவர் மேல் நிலைக்கு உயர்வதைக் காண்பித்தன.
கிழக்கில் இடம்பெற்ற எல்.ரீ.ரீ.ஈயின் இந்த உள்ளக மோதல்களின் பத்தாவது நினைவு தினம் நடைபெறும் இந்த முக்கியமான தருணத்தில் அந்த மோதல்கள் பற்றி இந்தப் பத்தி சற்றுக் கவனம் செலுத்த விரும்புகிறது. இந்தக் கட்டுரை கிழக்கின் புலி எதிர் புலி போர் மற்றும் அதன் பின்னணி என்பனவற்றை ஆராய்கிறது.
யுத்த நிறுத்தம்
புலிகளின் உயர்மட்டத் தளமாகிய வன்னிக்கும் அதன் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய தளபதி கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனுக்கும் இடையே எல்.ரீ.ரீ.ஈக்குள் கொந்தளிக்கும் உள்ளக முறுகல்களின் விளைவாக கிழக்குப் பகுதியின் தீவிரமான தளபதியால் உருவான ஒரு வெளிப்படையான கிளர்ச்சியை 2004 மார்ச் 3ல் உலகம் அறிய நேர்ந்தது.
தொமில்நுட்ப ரீதியாக அப்போது நோர்வேயின் அனுசரணையுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தம் அமலில் இருந்தது.
ஸ்கன்டிநேவிய யுத்தநிறுத்த கண்காணிப்பாளர்களிடம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ பிரிவு ஒரு சுயாதீனமான போக்கில் செல்லவிருப்பதால் கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஒரு தனியான சமாதான ஏற்பாட்டை ஒஸ்லோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருணா கேட்டுக்காண்டாh.
நோர்வேயினரிடத்தில் இதை அறிவித்த பின்னர்,கரடியனாற்றில் உள்ள தேனகம் செயலகத்தில் கருணா ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை 2004 மார்ச் 3ல் நடத்தினார், அதில் வன்னியை தளமாக் கொண்ட எல்.ரீ.ரீ.ஈ யினரிடமிருந்து கிழக்குப் புலிகள் சுதந்திரம் அடைந்திருப்பதாக அறிவித்தார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியை சோந்தவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக்கும் மற்றும் தியாகத்துக்கும் மாறாக எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டம் கிழக்கு பிரிவினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எல்.ரீ.ரீ.ஈ யில் உள்ள 32 துறைகளில் எதிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந தவர்கள் தலைவராக இல்லை என கருணா குற்றம் சாட்டினார்.
15 பேரைக் கொண்ட மத்திய குழுவில் இரண்டு பேர் மட்டுமே கிழக்கை சேர்ந்தவர்களாக உள்ளனர்(கேணல் பதுமன் மற்றும் கேணல் கருணா) அதுவும் அவர்கள் முறையே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதி தளபதிகளாக இருப்பதனால் தற்செயலாக இடம்பெற்றது.
கருணா இதை இராணுவ நிலைகளுடன் ஒப்பு நோக்கிக் காண்பித்தார், அதில் கிழக்குப் புலிகள் விகிதாச்சார ரீதியில் அதிக தியாகம் புரிந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த நேரத்தில் 4,543 வரையான கிழக்குப் புலிகள் ஆயுதப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்திருந்தார்கள். அதிலும், இதில் 2,302 பேர் வடக்கில் நடந்த சண்டைகளில் உயிர் நீத்துள்ளார்கள்.
கிழக்கு பகுதி நடவடிக்கைகளில் 2,241 பேர் மட்டுமே பலியாகியிருந்தார்கள். இந்த தியாகங்களுக்கு மாறாக கிழக்குப் புலிகள் சமாதானத்துக்குப் பிறகு நியாயமான தீர்வினை பெறவில்லை என கருணா குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கையுடன் எல்.ரீ.ரீ.ஈயின் கிழக்குப் புரட்சி சம்பந்தமான செய்தி காட்டுத் தீ போல பரவத் தொடங்கியது.
தனது கிளர்ச்சி சமயத்தின்போது கருணா, கொழும்பில் உள்ள அதிகார சக்திகளுடன் ஒரு தனியான புரிந்துணர்வை பதிய வைக்க முயற்சி மேற்கொண்டார்.
தனக்கும் கொழும்புக்கும் இடையே தனியான ஒரு புரிந்துணர்வு குறிப்பாணையை மேற்கொள்ள நோர்வே அனுசரணை வழங்க வேண்டும் என அவர் விரும்பினார்.
பிரபாகரன் கையொப்பமிட்ட யுத்தநிறுத்தம் தன்னைக் கட்டுப்படுத்தாது என கருணா அறிவித்தார், இருந்தும் புதிய ஒன்று கையொப்பமிடப்படும் வரைக்கும் தான் அதற்கு கட்டுப்படத் தயார் என்றும் தெரிவித்தார்.
ஒரே சமயத்தில் கொழும்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டுடனும் தன்னால் போரிட முடியாது என்பதை கருணா நன்கறிந்திருந்தார். அப்பொழுது கொழும்புடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவும் கருணா தயாராக இருந்தது போலவும் தெரிந்தது.
எனினும் எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் செயற்பட்டு கருணாவின் தெரிவை முன்கூட்டியே அடக்கிவிட்டார்கள். கருணா அங்கீகரிக்கப்பட்டால் யுத்தநிறுத்தத்தை இரத்துச் செய்யப் போவதாக புலிகள் அச்சுறுத்தினார்கள். இது அந்த திசையிலான அனைத்து நகர்வுகளையும் கொழும்பினால் நிறுத்தவேண்டி ஏற்பட்டது.
அப்படியான ஒரு நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் அணி சேர்ந்து கருணா தன்னைப் பலப்படுத்திக் கொள்வதை எல்.ரீ.ரீ.ஈ தடுக்கவேண்டியிருந்தது, எனவே கருணாவை அந்த பதவியிலிருந்து அகற்றுவதற்கு கிழக்கில் மிருகத்தனமான ஒரு தாக்குதலை எல்.ரீ.ரீ.ஈ தொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்தது.
மார்ச்சில் ஒரு தடுப்பு நடவடிக்கையை எடுக்க முடியாமலிருந்ததுக்கு காரணம் என்னவென்றால், பாராளுமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 2ம் திகதி நடைபெற இருந்ததுதான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (ரி.என்.ஏ), எல்.ரீ.ரீ.ஈ பின்துணை வழங்கியதால், ரி.என்.ஏ நாடளாவியரீதியில் ஒரு வெற்றியை எளிதாகப் பெறுவதற்காக ஒப்பீட்டளவில் சுமுகமான ஒரு தேர்தல் நடைபெறுவதை உறுதியாக்க வேண்டிய ஒரு கடமை அதற்கு இருந்தது.
எல்.ரீ.ரீ.ஈயின் உதவியையும் ஊக்குவிப்பையும் பெற்ற ரி.என்.ஏ, அந்த தேர்தலில் அதற்கு முந்திய சாதனைகளை முறியடித்து 22 அங்கத்தவர்களை வெற்றி கொண்டது.
பிரதான எல்.ரீ.ரீ.ஈ மற்றும் கிழக்குப் புலிகள் இடையே விரைவில் ஒரு மோதலை தயார் செய்வதற்கு இரு பகுதியினர் இடையிலும் ஒரு சஞ்சலம் மிக்க முட்டுக்கட்டை தோன்றியிருந்தது.
அந்த சமயத்தில் கருணா மற்றும் பிரதான பகுதி எல்.ரீ.ரீ.ஈ ஆகியோரிடமிருந்த இராணுவ சமநிலை மிகவும் சுவராஸ்யமானது. துணைக் குழுக்களை தவிர்த்து உணமையான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பலம் சுமார் 25,000 ஆகும்.
இவர்களில் கிட்டத்தட்ட 7,000 வரையானவர்கள் ஒன்றில் போராட்டக் காலம் முடிவடைந்துவிட்ட மூத்த அங்கத்தவர்கள் அல்லது தீவிர பேரில் ஈடுபட முடியாதபடி காயமுற்ற மற்றும் ஊனமுற்றவர்கள். இது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலாரையும் சோந்த 18,000 போராளிகளின் தொகையை மீதமாக தருகிறது.
இதில் கிட்டத்தட்ட 7,500 பேர்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சோந்தவர்கள். கிழக்குப் புலிகள் 7,500 பேரும் தங்களது சொந்த இடங்களில் இருக்கவில்லை. மதிப்பீட்டளவில் சுமார் 1,800 வரையான கிழக்கு அங்கத்தவர்கள் இந்த நெருக்கடி ஏற்பட்ட சமயம் வடக்கிலிருந்தார்கள்.
அந்தப் பிளவு ஏற்பட்டதின் பின் மற்றொரு 200 வரையான கிழக்குப் புலிகள் கருணாவை விட்டு விலகி வன்னிக்கு மாறிவிட்;டார்கள். 1800 கிழக்கு அங்கத்தவர்களில் 600 வரையானவர்கள் தனியான ஒரு அமைப்பாக பராமரிக்கப்பட்டார்கள்.
அவர்கள்தான் ஜெகதானின் கட்டளையின் கீழுள்ள ஜெயந்தன் படையணியின் முதலாவது பிரிவாகும். இந்த வீரர்கள் வடக்கு எல்லையான கிளாலி – எழுதுமட்டுவாள் – நாகர்கோவில் வழிகளில் யாழ்ப்பாண குடாநாட்டை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் யாழ்ப்பாண குடாநாட்டின் தென்பகுதியான முகமாலை தெற்குபகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு வரைகள் மற்றும் காவலரண்களின் கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கருணாவின் கிளாச்சிக்குப் பிறகு ஆரம்பத்தில் கிழக்கு படையணிகள் சந்தேகத்துக்கு உள்ளானார்கள்.
அதன் அங்கத்தவர்கள் அவர்களின் கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் களையப்பட்டு திரளான தொகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள்.
அவர்கள் பொட்டு அம்மான் மற்றும் பிரபாகரனுக்கு விசுவாசமான கிழக்குப் புலி தலைவர்களான ரமேஸ்,ராம்,பிரபா மற்றும் ரமணன் போன்றவர்களால் பரிசோதிக்கப்பட்டு சுருக்கமாக விசாரிக்கப்பட்டார்கள்.
இதற்கு மேலதிகமாக சுமார் 400 வரையான கிழக்கு அங்கத்தவர்கள் முக்கியமான புலித்தலைவர்களுக்கு மெய்ப்பாதுகாவலர்களாக இருந்தார்கள். புலித் தலைவர் பிரபாகரன்கூட தனது நம்பிக்கைக்கு உரிய 200 மெயப்பாதுகாவலர்கள் குழாமில் 75 கிழக்கு பகுதியினரை வைத்திருந்தார்.
இதர 800 வரையான கிழக்குப் புலிகள் வடக்கில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளில் கடமையாற்றி வந்தார்கள். கடற்புலிகள், புலனாய்வுப் பிரிவு, பொருளாhரப் பிரிவு, இறைவரிப் பிரிவு, மருத்துவ உதவியாளர்கள், பீரங்கிப் பிரிவு,ஆண் பெண் இரபாலாரும் உள்ள அரசியற் பிரிவு, தொடர்பாடற் பிரிவு, சிறுத்தை கமாண்டோக்கள் பிரிவு, மற்றும் வடக்கிலுள்ள நிருவாக அமைப்புகளிலும்கூட குறிப்பிடத் தக்க அளவு கிழக்குப் பகுதியினர் நிலை கொண்டிருந்தனர்.
கடற்புலிகள் மற்றும் கரும்புலி தற்கொலைப்படை பிரிவு அங்கத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்கள்.
அந்த நேரத்தில் எல்.ரீ.ரீ.ஈ யில் 32 துறைகள் மற்றும் போராட்ட அமைப்புகள் இருந்தன. இவை எதனையும் கிழக்கு பகுதியினர் தலைமையேற்று இருக்கவில்லை, ஆனால் அவை அனைத்தும் கிழக்குப் பகுதி ஆட்சேர்ப்பிலேயே பெரிதும் தங்கியிருந்தன.
கிழக்குப் பகுதியை சேர்ந்த மூன்று முக்கிய நபர்கள் அப்போது வடக்கில் சேவையாற்றி வந்தார்கள், எல்.ரீ.ரீ.ஈ நிருவாகச் செயலகத்தை சேர்ந்த புதியவன், மருத்துவ குழுவிலுள்ள நளன் மற்றும் தொடர்பாடல் பிரிவை சோந்த றோஷான் என்பவர்களே அந்த மூன்று பேர்கள்.
தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலரைத் தவிர இந்த அங்கத்தவர்களில் பெரும்பான்மையோர் பரிசீலனைக்கும் விளக்கங் கோரலுக்கும் உள்ளானார்கள். கிழக்குப் பகுதியை சேர்ந்தவர்களின் விசுவாசத்தில் சந்தேகம் ஏற்படாதவர்களும் மற்றும் கருணாவுடன் போராட விருப்பம் கொண்டவர்களையும் இணைத்து அவருடன் போராட ஒரு விசேட படைப்பிரிவு உருவாக்கப் பட்டது.
(தொடரும்)
ஊடகவியளாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை மீள்பிரசும் செய்யப்படுகிறது.