இஸ்லாமிய ஆண், தனது மனைவியை நோக்கி “தலாக், தலாக், தலாக்” என்று கூறி விட்டால், விவாகரத்து நிறைவேறி விடும் என்றும் அது தான் முத்தலாக் என்றும் பொதுவான ஒரு கருத்து இஸ்லாமியர் மத்தியிலும், இஸ்லாமியரல்லாதவர் மத்தியிலும் வெகுவாக பரவியிருக்கிறது.
இஸ்லாத்தின் எந்த சட்டங்களிலும் அனுமதிக்கப்படாத இப்படியொரு முறைமையை சில இஸ்லாமிய ஆண்கள் பயன்படுத்தி விவாகரத்து பெறுவதும் அதை ஆண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் ஜமாஅத்துகள் ஏற்றுக் கொள்வதும் சில இடங்களில் நடந்தேறி வருகிறது.
ஆனால் இஸ்லாம் இந்த முறைகேடான தலாக்கிற்கு எதிராக இருக்கிறது என்பது தான் நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை. இது குறித்த தெளிவான ஆணித்தரமான விளக்கங்கள் குர்ஆனில் இருக்கின்றன.
“முத்தலாக்” என்றால் என்ன ?
மூன்று தவணைகளில் தலாக் சொல்லுதல் முத்தலாக் என்று அழைக்கப்படுகிறது. அதாவது முதல் தடவை ஒரு கணவன் மனைவியை நோக்கி “நான் உனக்கு மணவிலக்கு அளிக்கிறேன்” என்று இரு சாட்சிகளின் முன்னிலையில் கூறிவிட்டால், அது முதல் தலாக் ஆக கருதப்படுகிறது. இதற்கு பெயர் தலாக்கே ரஜஈ.
முதல் தலாக் சொல்லப்பட்ட நாளிலிருந்து, மூன்று மாத விடாய் பருவங்கள் மனைவி காத்திருக்க வேண்டும். இது கர்ப்பத்தை அறியும் காலமாக கருதப்படுகிறது.
மூன்று மாத விடாய் பருவங்கள் முடிந்த பின்னரே, இரண்டாம் அமர்வு தொடங்குகிறது. இந்த கால கட்டத்திற்குள் மனமாற்றம் ஏற்பட்டு, தலாக் கூறிய ஆண் சேர்ந்து வாழ விரும்பினால், முதல் தலாக் நீக்கப்பட்டு, பழைய படி இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம். அதுவரை அப்பெண்ணின் அனைத்து வாழ்வாதார தேவைகளையும் கணவனே நிறைவேற்ற வேண்டும்.
முதல் தவணையின் காலக்கெடு முடிவுற்று, இரண்டாம் அமர்வில் அக்கணவன் மீண்டும் தலாக் சொல்கிறார் என்றால், அப்போதும் அதே மூன்று மாத விடாய் பருவங்களுக்கு அப்பெண் காத்திருக்க வேண்டும். இது தலாக்கே பாயின் என்றழைக்கப்படுகிறது. முதல் தவணையின் அனைத்து சட்டங்களும் இரண்டாம் தவணைக்கும் பொருந்துகிறது.
மேற்கூறிய இரண்டு தலாக்குகளும் அதன் கால அவகாசங்களும் முடிவடைந்த பின்னர், மூன்றாம் தலாக்கை ஒருவர் கூறினால் நிரந்தரமாக மணவிலக்கு நிறைவேறுகிறது. இது தலாக்கே முகழ்ழலா என்றழைக்கப்படுகிறது. இதை மீறுவோர் இறைவனின் கோபப் பார்வைக்கு ஆளாவதாக கடுமையாக குரானில் எச்சரிக்கப்படுகிறார்.
தலாக் குறித்த குர் ஆன் வசனங்கள்:
“தலாக்” கிற்காகவே தனியே ஒரு அத்தியாயம் (65 சூரத்துல் தலாக் ) இருந்தாலும், அதற்கு முந்தைய அத்தியாயங்களான சூரத்துல் பகராவிலும் சூரத்துன்னிஸாவிலும் தலாக் பற்றிய விளக்கங்கள் வருகின்றன.
தலாக் பற்றிய முதல் வசனங்களாக குர் ஆனில் சொல்ல வேண்டுமானால், சூரத்துல் பகராவில் உள்ள 226 மற்றும் 228 ஆகிய வசனங்களைச் சொல்ல முடியும்.
“தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்” ( 2:226)
“தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.
ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக) திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு” (2:228)
“தலாக்” பற்றி பேசும் தனி அத்தியாயமான “சூரத்துல் தலாக்கில்” வரும் வசனங்கள்:
“நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;
தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்” ( 65:1 )
“ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்.
அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்” (65:2 )
ஆகவே தலாக் பற்றிய குர் ஆனின் முதல் வசனமே, அதன் கால அவகாசம் குறித்த விளக்கங்களுடன் தான் துவங்குகிறது. ஒருவர் முதல்முறை தலாக் என்று சொல்லும் போது, ( இரண்டு பேர் சாட்சிகள் முன்னிலையில் ) தலாக் கூறப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் ஆணும் பெண்ணும் காத்திருக்க வேண்டும்.
இந்த மூன்று மாதங்கள் “இத்தா” என்று அழைக்கப்படுகிறது. அதாவது அந்தப் பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி இருக்கிறதா என்று சோதனை செய்ய இந்த கால அவகாசம் தேவை என்று திரும்பத் திரும்ப இரண்டு இடங்களில் வலியுறுத்தப்படுகிறது.
இந்த மூன்று மாதங்களில் ஒருவர் மனம் மாறினால், திரும்ப அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ எந்த தடையுமில்லை என்றும் குர் ஆனின் வசனங்கள் உறுதி படுத்துகின்றன.
இந்நவீன மருத்துவ யுகத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி இருப்பதை கண்டறிய முடியும் என்றாலும், குர் ஆனின் இந்த வசனங்கள், மருத்துவ காரணங்களுக்காக அன்றி, ஆண் பெண் இருவரும் சேர்ந்து வாழும் வாய்ப்புகளை அதிகமாக்கவும், தலாக் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும் கூறப்பட்டிருக்கின்றன என்பதை ஒருவர் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். மேலும் குர் ஆனில் எந்த இடத்திலும் “ஒரே அமர்வில் மூன்று தலாக்” ஐயும் சொல்ல முடியும் என்று கூறப்படவில்லை.
இஸ்லாமிய சட்டமான ஷரீயத் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
ஷரி அத் என்றழைக்கப்படுகிற இஸ்லாமிய சட்டங்கள் குர் ஆனின் அடிப்படையிலும், ஹதீஸ் என்றழைக்கப்படுகிற நபிகளின் வாய்மொழி அடிப்படையிலும் நபியின் வாழ்வியல் முறைகளான சுன்னத் அடிப்படையிலும் வரையறுக்கப்படுகிறது. ஹதீஸ், சுன்னத் இரண்டும் குர் ஆனுக்கு முரணாக இருக்க முடியாது.
ஆனாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் , தற்காலத்தைப் போன்றே, சில நபித் தோழர்கள் ஒரே அமர்வில் மூன்று தலாக் கூறியதாகவும் அதை நபி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் ஹதீசுகள் உறுதி படுத்துகின்றன. சஹீஹ் என்கிற ஹதீசில் வரும் சில குறிப்புகள்:
( நூல் 9 வசனம் 3473 ) அப்துல்லா பின் உமர் , என்கிற நபித் தோழர் அவரது மனைவியை மாதவிடாய் காலத்தில் மணவிலக்கு செய்தது குறித்து, நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். நபி அவரை திரும்பவும் அந்தப் பெண்ணை சேர்த்து கொள்ள கட்டளையிட்டதோடு, இன்னும் இரண்டு மாதவிடாய் பருவங்கள் முடியும் வரை அவர் காத்திருக்கவும், மனமாற்றம் ஏற்பட்டால் இல்வாழ்க்கையை பழைய படி தொடருங்கள் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
சுருக்கமாக இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஒருவர் முத்தலாக்கையும் ஒரே அமர்வில் கூறினாலும், அது ஒரே ஒரு தலாக்காக மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மீண்டும் இரு தலாக்கிற்காக அவர் காத்திருக்க வேண்டும். “தலாக், தலாக்,தலாக்” என்று ஒரே அடியில் கூறி அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணை ஒரு ஆண் விலக்கி வைக்க முடியாது.
இந்த அடிப்படையில் தான் இஸ்லாமிய சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு தலாக்கின் போதும் மூம்மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
அது போலவே ஒரே அமர்வில் முத்தலாக் கூறுவதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்துக்கும் வந்தடைய முடிகிறது. அது மட்டுமின்றி, “இத்தா” காலங்களில் பெண்களுக்குரிய அனைத்து தேவைகளையும் ஒரு ஆண் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் ஒரு பெண் கருவுற்றது உறுதியானால் குழந்தை பெறும் வரையிலும் அவர் தலாக் கூற முடியாது என்பதையும் குர் ஆன் வலியுறுத்துகிறது.
குழந்தை பெறும் வரை வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றுவதோடு அல்லாமல், குழந்தை பெற்று பால் குடிக்கும் வரை அதற்கான பணத்தையும் அவர் வழங்க வேண்டும். இதற்கான குர் ஆன் வசன ஆதாரங்களை வேண்டுவோர், என்னை தொடர்பு கொள்ளலாம்.
பெண்கள் தலாக் கூற முடியுமா? இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதன் மூலம் பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர்? ஜமா அத்துகளின் ஒற்றை சார்பு நிலை, சமகால இந்தியச் சமூகத்தில் தலாக் குறித்த நடைமுறை வேறுபாடுகள், ஷாபானு வழக்கு, பா.ஜ.க-வின் தலாக் அரசியல் பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாகக் காண்போம்.
அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்